என் வீட்டுக்காரர் அரசியலுக்கு வர மாட்டார், சொல்கிறார் பிரியங்கா
ஏற்கனவே சோனியா காந்திக்கு அடுத்து ராகுல் காந்தி என்ற ஒரு ஆர்டரை ஏற்படுத்தி காங்கிரஸார் செயல்பட்டு வருகின்றனர். சிலர் பிரியங்காவை அரசியலுக்கு அழைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நானும் அரசியலுக்கு வருவேன் என்று கூறி டென்ஷனை கூட்டியுள்ளார் பிரியங்காவின் கணவரான ராபர்ட் வதேரா. இதுதொடர்பாக ட்விட்டர் மூலம் அவர் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து பிரியங்காவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ராபர்ட்டின் ட்விட்டர் செய்தியை மீடியாக்கள் தவறாக அர்த்தம் எடுத்துக் கொண்டுள்ளன. அவர் ஒரு வெற்றிகரமான பிசினஸ்மேனாக இருந்து வருகிறார். அதில் அவர் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். தனது தொழிலை மாற்றும் எண்ணம் அவருக்கு இல்லை. அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்றார் பிரியங்கா.
இருப்பினும் தற்போது உ.பியில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்திக்கு உதவியாக களம் இறங்கியுள்ளார். மேலும் மனைவி பிரியங்காவுக்குத் துணையாகவும் போய்க் கொண்டிருக்கிறார். இருவருக்கும் உதவுவதற்காக தனது மகள் மிரியாவுடன் உ.பியில் முகாமிட்டுள்ளார் ராபர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.