கிடுக்கிப் பிடி விசாரணையில் ராவணன்... 2 நாட்களுக்கு போலீஸ் பிடியில்!
மணல் குவாரி லைசென்ஸ் வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்துவிட்டதாக சசிகலாவின் உறவினர் ராவணன் மீது திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் செய்தார். அந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில், ராவணனிடம் விசாரணை நடத்துவதற்காக, கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை ஆலந்தூர் கோர்ட்டில் வாரண்ட் பெற்று சென்னைக்கு போலீசார் கொண்டு வந்தனர். கடந்த 3-ந் தேதி அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, ராவணனை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அரசு தரப்பு வக்கீல் வேலுசாமி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று ஆலந்தூர் கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு பாலசுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராவணனை 5 நாள் காவலில் வைக்க போலீஸ் தரப்பில் அனுமதி கேட்டனர். இதற்கு ராவமன் தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. ஏற்கனவே எல்லாவற்றையும் சொல்லி விட்டோமே என்று ராவணன் தரப்பு பதறியபடி கூறியது.
அப்போது, ராவணனிடம் போலீஸ் காவலுக்கு செல்கிறீர்களா என்று மாஜிஸ்திரேட் கேட்டார். அதற்கு, நான் ஏற்கனவே போலீசாரிடம் எல்லாவற்றையும் விளக்கி சொல்லிவிட்டேன். தற்போது மீண்டும் செல்ல விரும்பவில்லை என்றார் அவர். சரி, உடலில் காயம் உள்ளதா என்று மாஜிஸ்திரேட் திரும்பக் கேட்டார். அதற்கு இல்லை என்றார் ராவணன்.
அப்போது அரசு தரப்பு வக்கீல் வேலுசாமி குறுக்கிட்டு, கரூரில் இருந்து திருச்சி வரை உள்ள மணல் குவாரிகளுக்கு லைசென்ஸ் பெற முன்பணமாக ரூ.1 கோடி பெற்று உள்ளார். இதற்கு மொத்தமாக எவ்வளவு தொகை பேசப்பட்டது. முன்பணமாக வாங்கிய ரூ.1 கோடி எந்த வங்கியில் போடப்பட்டு உள்ளது. எங்கு செலவிடப்பட்டது போன்ற விவரங்கள் இந்த வழக்கிற்கு தேவைப்படுவதால் 5 போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார். இதற்கு ராவணன் தரப்பு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் இறுதியில் 2 நாள் போலீஸ் காவலில் ராவணனை அனுப்ப மாஜிஸ்திரேட் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டார். அவரை வருகிற 8-ந் தேதி மாலை 5 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
இதையடுத்து ராவணனை விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழைத்து சென்றனர். தற்போது ராவணனிடம் கிடுக்கிப் பிடி விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது. மறுபடியும் அவரை காவலில் எடுப்பது எப்போது என்பது உறுதியாக இல்லாததால், இந்த முறையே முடிந்தவரை அத்தனையையும் கறந்து விட போலீஸார் மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ராவணன் தரப்பு பெரும் பதட்டத்தில் உள்ளதாம்.