சங்கரன்கோவிலில் ஜெயலலிதா பிரச்சாரம்: அமைச்சர்கள் குழு ஆய்வு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலையொட்டி முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் பகுதிகளை அமைச்சர்கள் நேற்று ஆய்வு செய்தததால் தேர்தல் களம் "சூடு' பிடித்துள்ளது.
சங்கரன்கோவில் அமைச்சராக இருந்த கருப்பசாமி மரணமடைந்ததால் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதிக்கு முன்பாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. இத்தேர்தலுக்கு அதிமுக சார்பில் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் முத்துசெல்வி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மற்ற கட்சிகள் இதற்கான ஆலோசனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சூழ்நிலையில் சங்கரன்கோவில் தொகுதி தேர்தல் களத்தில் ஆளுங்கட்சி முழு வீச்சில் இறங்கியுள்ளது.
ஜெயலலிதா பிரச்சாரத்திற்காக விரைவில் சங்கரன்கோவிலுக்கு வருகிறார். இந்த பிரச்சார பயண ஏற்பாடுகள், பொதுக் கூட்டம் நடக்கும் இடம் உள்பட பல்வேறு பகுதிகளை நேற்று அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், செந்தூர் பாண்டியன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். குருவிகுளம், திருவேங்கடம், கழுகுமலை-திருவேங்கடம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, பனவடலிசத்திரம், வன்னிக்கோனேந்தல், தேவர்குளம் ஆகிய பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் தனித் தனியாக ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், செந்தூர் பாண்டியன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் கலெக்டர் செல்வராஜ், டி.ஆர்.ஓ. உமா மகேஸ்வரி, திட்ட அலுவலர் அமானுல்லா, எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், மேயர் விஜிலா, துணை மேயர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் தொகுதியில் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்களை விரைவில் முடிக்கவும், பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை உடனடியாக வழங்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குடிநீர், ரோடு வசதி, சுகாதாரம், மின்சார வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் முழு வீச்சில் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தொகுதியில் ஆங்காங்கே நிலவும் அதிருப்திகளை சமாளிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுங்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இடைத்தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்யாசத்தில் வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
தொகுதியில் மொத்த வாக்காளர்கள், வாக்குச்சாவடிகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டது. வாக்குச்சாவடிகளுக்கு தனித்தனி பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும் கட்சியினருடன் ஆலோசிக்கப்பட்டது. இடைத்தேர்தல் ஆலோசனை என்பதால் விபரங்களை வெளியிட வேண்டாம் என்று அமைச்சர்கள் கேட்டு கொண்டதையடுத்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள் இது தொடர்பான தகவல்களை தெரிவிக்காமல் ரகசியம் காத்தனர்.
ஒரு சில நாட்களில் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் சூழ்நிலையில் மற்ற கட்சிகளும் களம் இறங்க வாய்ப்புள்ளதால் தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications