நில அபகரிப்பு: காங்கிரஸ் முன்னாள் எம்.பி. உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
மதுரை : ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த புகாரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ராஜேஸ்வரன் உள்ளிட்ட 6 பேர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வழக்கு என்ன?
மதுரை டி.ஆர்.ஓ. காலனியைச் சேர்ந்தவர் திருமலைராஜ். இவர் ராமநாதபுரம் தொகுதி முன்னாள் எம்.பி. ராஜேஸ்வரனின் மைத்துனர். மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1 ல் திருமலைராஜ் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:
எனக்கு மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய ஊர்களில் ரூ.1 கோடி மதிப்பிலான நிலங்கள் உள்ளது. எனக்குச் சொந்தமான இந்த நிலங்களை சென்னையில் உள்ள முன்னாள் எம்.பி. ராஜேஸ்வரன், அவரது மனைவி செல்வசுந்தரி, மகன் ராஜேஷ்குமார், திருவள்ளூரில் வசிக்கும் உறவினர் ஜெயபால், மதுரை செல்லூர் கதிர்வேலன், மதுரை மேலப்பொன்னகரம் சேதுராமன் ஆகியோர் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு என்னை 22.5.10 ல் அழைத்துச் சென்று, மிரட்டி செல்வசுந்தரி பெயரில் தான செட்டில் என எழுதி வாங்கிக் கொண்டனர்.
எனக்குச் சொந்தமான அந்த நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அவர்கள் எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே, எனது நிலத்தை மீட்டுத்தருவதோடு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மதுரை குற்றவியல் நீதிமன்ற நடுவர் 1 (பொறுப்பு) உமாமகேஸ்வரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றம் சுமத்தப்பட்டுள்ள 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு நீதிபதிஉத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இந்த குற்றம் சாட்டப்பட்டுள்ள 6 பேர் மீது மதுரை மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications