ஆசிரியர் பற்றி மனக்குறை இருந்தால் புகார் கொடுக்கலாம்: மாணவர்களுக்கு பள்ளிகள் அறிவுறுத்தல்!
சென்னை: ஆசிரியர் மீது மனக்கசப்பு இருந்தால் அதை தைரியமாகத் தெரிவிக்கலாம் என்று சில தனியார் பள்ளிகள் அறிவுறுத்தியுள்ளன. இதன் மூலம் ஆசிரியர்-மாணவர் உறவு குறித்து அவ்வபொழுது அறிந்து பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று பள்ளிகள் கருதுகின்றன.
சென்னை பாரிமுனையில் உள்ள புனித மேரிஸ் மேல்நிலைப்பள்ளியில் பணி புரிந்த இந்தி ஆசிரியை உமா மகேஸ்வரியை 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பள்ளி மாணவன் இவ்வளவு கொடூரமாகக் கொலை செய்தது பலரையும் திடுக்கிடச் செய்துள்ளது.
மாணவர்கள் தவறு செய்தாலோ, குறும்புத்தனமாக இருந்தாலோ அவர்களைப் பற்றி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவிக்கலாம். ஆனால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றி மாணவர்களால் யாரிடமும் புகார் செய்ய முடிவதில்லை. இந்த குறையைப் போக்க ஆசிரியர்கள் பற்றிய மாணவர்களின் கருத்துகளை அறிந்து கொள்ள சில பள்ளிகள் வழிவகை செய்துள்ளன.
சில தனியார் பள்ளிகள் மாணவர்கள் வைத்திருக்கும் டைரியில் ஆசிரியர்களின் நடவடிக்கை பற்றியும் குறிப்பிடலாம் என்று அறிவுறுத்தியுள்ளன. மீனம்பாக்கம் வித்யாலயா பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் நோட்டு கொடுத்து ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துகிறார்கள், மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது குறித்து எழுதுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே போன்று ஆசிரியர்கள் பற்றி ஏதாவது கூற விரும்பினால் மாணவர்கள் அதை தைரியமாக முதல்வரிடம் தெரிவிக்கலாம் என்று முகப்பேரில் உள்ள தனியார் பள்ளி ஒன்று கூறியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் முதல்வர் ஜெயலிதாவுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது,
அண்மையில் பள்ளி கல்லூரிகளில் நடக்கும் சில வன்முறை சம்பவங்கள், காதல் தகராறு, போலீசாருடன் மாணவர்கள் மோதல் சம்பவங்கள் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவர் சமுதாய சீர்கேடு எங்கிருந்து ஆரம்ப மாகிறது என்பதை கண்டு பிடிக்க ஆசிரியர்- மாணவர் பள்ளி, கல்லூரி தாளாளர், பெற்றோர் சங்கம், போலீசார் அடங்கிய கூட்டு குழு ஏற்படுத்தி அதன் மூலம் ஆலோசனை நடத்தினால் பிரச்சினைகள் வெகுவாக தீர்க்க வாய்ப்பு ஏற்படும்.
தொலைக்காட்சி, சினிமாவில் வரும் பழி வாங்கும் சம்பவங்கள் வன்முறைகளால் மாணவர் சமுதாயம் சீரழிகிறது என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவிப்பதால் அனைத்து துறையினரும் அடங்கிய ஒரு குழுவை ஏற்படுத்தி சீர்திருத்தத்தை செயல்படுத்த வேண்டும். வன்முறையை தூண்டும் திரைப்படங்கள், வக்கிர பாடல்கள் ஆகியவற்றையும் தடை செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.