அரசு கப்பலின் கேப்டன் திடீர் மாயம்: காவல் நிலையத்தில் புகார்
தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு வந்த கப்பலில் பயிற்சி கேப்டனாக இருந்தவர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மகன் கண்ணன் (23). அவர் பி.எஸ்.சி. நாட்டிக்கல் சயின்ஸ் படித்துவிட்டு அரசுக்கு சொந்தமான பூம்புகார் ஷிப்பிங் கார்பரேஷனின் எம்.வி. தமிழ் அண்ணா என்ற கப்பலில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு பயிற்சி கேப்டனாக சேர்ந்தார்.
இந்த கப்பலில் கடந்த 3ம் தேதி கொல்கத்தாவில் இருந்து ஒடிசா செல்வதாக கண்ணன் தனது தாயார் லட்சுமியிடம் போனில் கூறியுள்ளார். ஆனால் கடந்த 5ம் தேதி லட்சுமிக்கு மீண்டும் போன் வந்துள்ளது. எடுத்துப் பேசியபோது உங்கள் மகன் கண்ணனை காணவில்லை என்று கப்பல் கேப்டன் ரோஜர் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கப்பல் தளத்திற்கு வந்த அக்கப்பல் கேப்டனிடம் பயிற்சி கேப்டன் கண்ணன் காணாமல் போனது குறித்து பூம்புகார் ஷிப்பிங் கார்பரேஷன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், அங்கு வந்த கண்ணனின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதனையடுத்து அவர் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.