நாளை ஆந்திராவில் பட்ஜெட் தாக்கல்: இன்று இணையதளத்தை ஹேக் செய்த விஷமிகள்
ஹைதராபாத்: ஆந்திர மாநில பட்ஜெட்டை அம்மாநில நிதியமைச்சர் வெளியிடும் முன்பு அரசு இணையதளத்தை விஷமிகள் ஹேக் செய்து வெளியிட்டுள்ளனர்.
நாளை சட்டசபையில் நிதியமைச்சர் அனம் ராமநாராயன் ரெட்டி பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கிறார். இந்நிலையில் விஷமிகள் பட்ஜெட் குறித்த தகவல்கள் இருந்த இணையதளத்தை ஹேக் செய்துள்ளனர். மேலும் அதில் http://budget.ap.gov.in/Dz.htm என்ற கூடுதல் பக்கத்தை இணைத்துள்னர்.
இதில் விந்தை என்னவென்றால் ஹேக்கர்கள் பல்வேறு துறைகளின் இணையதளங்களை ஹேக் செய்தாலும் அதை அழிக்கவில்லை மாறாக கூடுதலாக ஒரு பக்கத்தை சேர்த்துள்ளனர். ஹேக்கர்கள் என்றால் தகவல்கள் திருடுபவர்கள், குறும்புத்தனம் செய்பவர்கள் என்று அர்த்தம் இல்லை. பாதுகாப்பான இணையதளங்களையும் கூட ஹேக் செய்யும் திறமை எங்களுக்கு உண்டு என்பதை நிரூபிக்கத் தான் இவ்வாறு செய்கிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கெசட் தகவல்கள், அரசாணைகள், வணிக வரி, தொழிற்துறை, ஊரக வளர்ச்சித் துறை, தோட்டக்கலை உள்ளிட்ட துறைகளின் இணையதளங்களை ஹேக் செய்துள்ளனர். அரசு இணையதளங்களில் காதல் சின்னமும், உருது எழுத்துக்களும் கொண்ட பக்கங்களை இணைத்துள்ளனர்.
ஆனால் இணையதளங்களை யாரும் ஹேக் செய்யவி்ல்லை என்கிறது ஆந்திர அரசு.