சென்னை ஏர்போர்டில் ஆந்திர பெண்ணிற்கு குழந்தை பிறந்து இறந்தது: அதிகாரிகள் காரணமா என்று விசாரணை
சென்னை: சென்னை விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணிற்கு பிரசவ வலி எடுத்து கழிவறைக்கு ஓடினார். அப்போது அவருக்கு திடீரென ஆண் குழந்தை பிறந்து கீழே விழுந்து இறந்தது. குழந்தையின் இறப்பிற்கு விமான நிலைய அதிகாரிகள் காரணமா என்பது குறித்து விசாரணை நடந்து வருகின்றது.
சென்னையில் இருந்து நள்ளிரவு 1.30 மணிக்கு மலேசியா செல்லும் மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று புறப்படத் தயாராக இருந்தது. அதில் பயணிப்பதற்காக ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த சியாமளா சுந்தரி(31) என்ற கர்ப்பிணி பெண் வந்திருந்தார்.
அப்போது விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு சியாமளா சுந்தரியின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை சோதனை செய்த பிறகு, குழந்தை பிறப்பிற்கான மருத்துவச் சான்றிதழை கேட்டனர். ஆனால் அதனை அந்த கர்ப்பிணி எடுத்து வர மறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து அவரை விமானத்தில் ஏற்ற அதிகாரிகள் மறுத்தனர். 7 மாத கர்ப்பிணியான அவர் மலேசியாவில் உள்ள கணவனை பார்த்துவிட்டு ஒரு வாரத்தில் வந்து விடுவதாக தெரிவித்தும் அதிகாரிகள் ஏற்கவில்லை.
இதனால் விமான நிலைய அதிகாரிகளுக்கும், சியாமளா சுந்திரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு பிரசவ வலி எடுத்தது. வலி தாங்க முடியாமல் அவர் விமான நிலையத்தில் உள்ள கழிவறைக்கு ஓடினார்.
அப்போது அவருக்கு திடீரென ஆண் குழந்தை பிறந்து, ஓடும் வழியில் கீழே விழுந்து இறந்தது. இதனை கண்ட அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக விமான நிலைய அதிகாரிகளும், டாக்டர்களும் சேர்ந்து சியாமளா சுந்திரிஅவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
7 மாத கர்ப்பணிக்கு விமான நிலைய அதிகாரிகள் கொடுத்த மன அழுத்தத்தால் குழந்தை பிறந்ததா? அல்லது சாதாரணமாக குழந்தை பிறந்து இறந்ததா என்பது உட்பட பல கோணங்களில் விசாரணை நடந்து வருகின்றது.












Click it and Unblock the Notifications