என் கணவர் திவாகரனை குண்டர் சட்டத்தில் அடைக்க முயற்சி: மனைவி ஹேமலதா புகார்
அடுத்தடுத்து வழக்கு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த ரிஷியூரை சேர்ந்த கஸ்தூரி என்பவரது வீட்டை இடித்தார் என்று சிறையில் உள்ள திவாகரன் மீது தொடரப்பட்ட முதல் வழக்கு. இதேபோல், கடந்த 2011ம் ஆண்டு எடையூரை சேர்ந்த சரவணன் என்பவரை மிரட்டி ரூ1 லட்சம் பணம் பறித்தார் என்பது 2-வது வழக்கு
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 20 பேர் தங்கள் மீதான நடவடிக்கைக்கு திவாகரனின் தூண்டுதலே காரணம் என்று கூறியுள்ளது 3வது வழக்கு. திவாகரன் தூண்டுதலால் ஹரித்திராநதி தெப்பக்குளத்தை மீன்பிடி குத்தகைக்கு தர மறுத்து தம்மை அடித்து உதைத்தார் என்ற மன்னார்குடியை சேர்ந்த மீன்பிடி குத்தகைதாரர் கோவிந்தராஜின் புகார் 4-வது வழக்கு
ருக்மணிபாளையம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்ரமிப்பு செய்தது 5-வது வழக்கு. அடுத்தடுத்த தொடர் வழக்குகளினால் திவாகரன் மீது குண்டாஸ் பாயும் நிலை உள்ளது.
மனைவி மனு
இந்நிலையில், திவாகரன் மனைவி ஹேமலதா வழக்கறிஞர்களுடன் திருவாரூர் ஆட்சியர் நடராஜனை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.
அதில், திவாகரன் மீதான வழக்குகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது. என் கணவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசு முயற்சித்து வருவதாக தெரிகிறது. இதய நோயாளியான அவரது உடல் நிலையை கருத்தில்கொண்டு, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.