64வது பிறந்த நாள்.. சென்னையில் 64 ஜோடிகளுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார் ஜெ.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட அதிமுகவினர் மாநிலம் முழுவதும் தடபுடலாக தயாராகி வருகிறார்கள். சென்னையில் 64 ஜோடிகளுக்கு இலவச திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஜெயலலிதா தனது கையால் தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைக்கிறார்.
முதல்வர் ஜெயலலிதா வருகிற 24ம் தேதி தனது 64வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். இதையொட்டி மாநிலம முழுவதும் நல உதவிகள் வழங்குவது, கோவில்களில் திருத்தேர் இழுப்பது, அன்னதானம், ரத்ததானம் என பல்வேறு வகையான கொண்டாட்டங்களுக்கு அதிமுகவினர் ஆயத்தமாகி வருகின்றனர்.
சென்னையில் ஜெயலலிதா பேரவை சார்பில் 64 ஜோடிகளுக்கு இலவச கல்யாணம் நடத்தி வைக்கவுள்ளனர். இதை முதல்வர் ஜெயலலிதாவை தனது கையால் தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைக்கிறார்.
ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 19-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த விழாவில் ஜெயலலிதா கலந்து கொண்டு 64 ஜோடிகளுக்கும் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
64 வகை சீர்வரிசை
பின்னர் மணமக்களுக்கு 64 சீர்வரிசை பொருட்களை ஜெயலலிதா தனது கையால் வழங்குகிறார். மணமக்களுக்கு பட்டு வேட்டி, சேலை, தாலிக்கு 4 கிராம் தங்கம், சீர் வரிசையாக மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர், குடம், குத்து விளக்கு, கியாஸ் அடுப்பு, பாத்திரங்கள், கடிகாரம், மெத்தை, ஜமுக்காளம், தலையணை, சூட்கேஸ் உள்பட 64 விதமான பொருட்கள் வழங்கப்படுகிறது.
மொத்தம் ரூ. 1 லட்சம் மதிப்பில் ஒவ்வொரு ஜோடிக்கும் இந்த சீர்வரிசைப் பொருட்கள் தரப்படுகிறது. இதில் மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், தாலித் தங்கம் ஆகியவற்றை அரசே இலவசமாக கொடுக்கிறது. அந்தத் திட்டத்தை இந்த கல்யாணத்திற்குப் பயன்படுத்திக் கொள்வார்களா என்பது தெரியவில்லை.
கல்யாணத்தையொட்டி கல்யாண ஜோடிகளுக்கும், கல்யாணத்திற்கு வருவோருக்கும் சிறப்பான விருந்துக்கும் ஏற்பாடு செய்துள்ளனராம்.