பெரியபப்பா வைத்த ரூ. 2 லட்சம் கடனுக்காக சென்னை சிறுவனை கடத்திய கடன்காரர்கள்
சென்னை: தனது பெரியப்பா வைத்த ரூ. 2 லட்சம் கடனுக்காக, கடத்தல்காரர்களின் கையில் சிக்கி 24 மணி நேரம் படாதபாடு பட்டு விட்டான் சென்னையைச் சேர்ந்த சிறுவன் யோகேஸ்வர்.
கடத்தப்பட்ட சிறுவனை போலீசார் மீட்டு இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
அம்பத்தூர் அருகே உள்ள பாடி ஜெகதாம்பிகை நகர் சேக்கிழார் தெருவைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது மனைவி உஷா நந்தினி. அவர்களுக்கு லோகேஸ்வர் (12), ஜெய்சூர்யா (6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
ரஜினிகாந்த் குடும்பமும், அவரது அண்ணன் நிரஞ்சன் குமார் குடும்பமும் கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை வடபழனியைச் சேர்ந்த பாபு உள்பட 3 பேர் நிரஞ்சன் குமாரைத் தேடி வீட்டுக்கு சென்றுள்ளனர். அவர் தங்களிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கிவிட்டு 6 மாத காலமாக தங்களை இழுத்தடிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களை வீட்டில் உட்கார வைத்துவிட்டு பாட்டி ராணி யோகேஸ்வர், ஜெயசூர்யாவை தெரு முனையில் விட்டுவிட்டு வந்துள்ளார். வந்து பார்த்தபோது அந்த 3 பேரும் கிளம்பிவிட்டனர். அவர்கள் தெருமுனையில் பள்ளி பஸ்ஸுக்காக நின்ற யோகேஸ்வரை காரில் கடத்தினர். அதை பார்த்த ஜெயசூர்யா வீட்டுக்கு ஓடி வந்து விவரத்தை தெரிவித்தான்.
உடனே இது குறித்து கொரட்டூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கமிஷனர் திரிபாதியின் உத்தரவின்பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
போலீசாரின் தீவிரம் அறிந்த அந்த கும்பல் மாணவனை புதுவையில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தில் அழைத்து வந்தது. கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் நடத்தப்பட்ட சோதனையின்போது சிறுவன் மீட்கப்பட்டான். இதையடுத்து அவனை கடத்தியதற்காக பாலசுப்பிரமணியம், பீட்டர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாணவன் கடத்தப்பட்டதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. அதன் விவரம் வருமாறு,
கும்பகோணத்தைச் சேர்ந்த பாபு, தனது சகோதரர்கள் அன்புமணி, ராமசாமி ஆகியோருடன் சேர்ந்து வடபழனியில் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகின்றார். நிரஞ்சன் குமாரின் பூர்வீகமும் கும்பகோணம் தான். இந்நிலையில் நிரஞ்சனும், பாபுவும் நெருங்கிய நண்பர்களாகினர்.
பாபுவுடன் சேர்ந்து நிரஞ்சன் குமாரும் கார் விற்கும் தொழில் செய்தார். அதில் நிரஞ்சன் பாபுவுக்கு ரூ. 2,10,000 பணம் கொடுக்க வேண்டும். பணத்தை பலமுறை கேட்டும் நிரஞ்சன் திருப்பித் தரவில்லை. போன் செய்தால் சுவிட்ச் ஆப் செய்துவிடுவார். வீட்டுக்கு போனாலும் அவரைப் பார்க்க முடியவில்லை. நிரஞ்சன் வெளியே சென்றுவிட்டு இரவு 10 மணிக்கு பிறகே வீடு திரும்புவார். இதனால் பாபு செய்வதறியாது திகைத்தார்.
இந்நிலையில் நேற்று காலை பணத்தை வசூலிக்க பாபுவும்,மேலும் 2 பேரும் நிரஞ்சன் குமார் வீ்ட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. எப்பொழுது பார்த்தாலும் இப்படியே சொன்னால் நான் என்ன செய்வது என்று பாபு தகராறு செய்துள்ளார். அந்த நேரத்தில் சிறுவர்கள் பள்ளிக்கு செல்வதைப் பார்த்த அந்த 3 பேர் யோகேஸ்வரை கடத்தினர்.
அவனை காரில் கும்பகோணம் அழைத்துச் சென்றனர். அவர்கள் கும்பகோணத்தில் இருப்பது செல்போன் டவர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குள் போலீசார் நிரஞ்சனைக் கண்டுபிடித்து பண விவகாரம் பற்றி தெரிந்து கொண்டனர். பாபுவின் செல்போனில் தொடர்பு கொண்டு நீங்கள் மாணவனுடன் கும்பகோணத்தில் இருப்பது எங்களுக்கு தெரியும், அவனை விட்டுவிடுங்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நீங்கள் கடத்தியது நிரஞ்சனின் மகன் அல்ல என்றும் தெரிவித்தனர். அதற்கு பாபு கூறுகையில், நிரஞ்சன் குமாரிடம் இருந்து எப்படி பணத்தை வாங்குவது என்று தெரியாமல் தான் சிறுவனைக் கடத்தினேன். அவனை பத்திரமாக விட்டு விடுகிறேன் என்றார். அதன்படி யோகேஸ்வரை தனது உதவியாளர்கள் பாலசுப்பிரமணியன், பீட்டருடன் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
அவர்கள் 2 பேரும் யோகேஸ்வரை புதுவையில் இருந்து அரசுப் பேருந்தில் சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னை அருகே போலீசார் சிறுவனை மீட்டு அந்த 2 பேரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே தலைமறைவாக உள்ள பாபு மற்றும் அவரது சகோதரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.