தஞ்சை தொண்டு நிறுவன தலைவர் மீது கிரிமினல் நடவடிக்கை: கலெக்டர் சகாயம் உத்தரவு
மதுரை: அரசு வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்த தஞ்சையைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் தலைவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற கணக்கு எடுக்கப்பட்டது. இதற்கான தொகை அடித்தளம், சுவர், மேற்கூரை, பூச்சுமானம் என்று 4 கட்டங்களாக பயனாளிக்கு வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர், கொட்டாம்பட்டி பகுதியில் தஞ்சையைச் சேர்ந்த திருக்குவளை அஞ்சுகம் அம்மையார் தமிழ்நாடு அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நல மத்திய சங்கம் என்ற தொண்டு நிறுவனம் இத்திட்டப் பணிகளை மேற்கொண்டது.
இதற்காக அந்த அமைப்பு அரசிடம் பல லட்சம் ரூபாய் பெற்றது. ஆனால் அதற்குரிய வீடுகளை கட்டவில்லை. இதனால் பல இடங்களில் கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கின்றது.
கொட்டாம்பட்டி யூனியனில் இந்த அமைப்பு 259 வீடுகளுக்கு பொறுப்பேற்றது. இதில் 240 வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் ரூ.7.20 லட்சம் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர மேலூரில் 339 வீடுகளுக்கு பொறுப்பேற்று 248 வீடுகள் பாதியில் நிற்கின்றது. இதனால் அரசுக்கு ரூ.7.44 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் கச்சிராயன்பட்டி, கோட்ட நத்தம்பட்டி உட்பட பல கிராமங்களில் பலர் வீடு இல்லாமல் உள்ளனர். சிலர் பயணிகள் நிழற்குடையில் வசிக்கும் நிலையில் உள்ளனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார். மேலும் தொண்டு நிறுவன அமைப்பாளர் ராஜா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் அரசை ஏமாற்றும் நோக்கில் செயல்பட்ட பல தொண்டு நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன.












Click it and Unblock the Notifications