சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட சமுதாயம் உருவாக மாணவர்கள் பாடுபட வேண்டும்: சரத்குமார்
தென்காசி: சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட சமுதாயம் உருவாக மாணவர் சமுதாயம் பாடுபட வேண்டும் என தென்காசியில் நடந்த பள்ளி விழாவில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான சரத்குமார் பேசினார்.
தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, இலக்கிய மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ராமலிங்கம் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை உமாசித்ரா வரவேற்றார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார் மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசியதாவது,
இந்தியாவை அனைத்து நாடுகளும் திரும்பிப் பார்க்கும் வகையில் நாம் முன்னேற்றி வருகிறோம். காமராஜர் 19,000 பள்ளிகளை திறந்தார். மதிய உணவு வழங்கினார். எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் கொண்டு வந்தார். முதல்வர் ஜெயலலிதா கல்விக்கு ஊக்கத் தொகை வழங்கி வருகிறார். நல்ல மாணவர்கள் உருவாக அடித்தளமாக இருப்பது பள்ளி தான்.
மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக அதிக புத்தகங்களை படிக்க வேண்டும். இன்றைய உலகில் போட்டிகள் அதிகமாகிவிட்டதால் மன அழுத்தமும் அதிகமாகிறது. மாணவ, மாணவிகள் தங்களது பிரச்சனைகளை ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
கோடாரி கூர்மையாக இருப்பது போன்று அறிவையும் கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். வருங்கால சமுதாயத்தினர் நலனுக்காக நாம் பாடுபட வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளை மறக்கக் கூடாது. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட சமுதாயத்தை உருவாக்க மாணவர் சமுதாயம் பாடுபட வேண்டும் என்றார்.