சாலையில் கிடந்த 16 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த போராசிரியர் தம்பதி
கடலூர்: சாலையில் கிடந்த 16 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த பேராசிரியர் தம்பதியரின் நேர்மையை கடலூர் மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி சாந்தா. இருவரும் அண்ணாமலைப் பல்கலையில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு இருவரும் பைக்கில் சிதம்பரத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அண்ணாமலை நகர் முக்கிய சாலையில் முன்னால் சென்ற காரில் இருந்து லெதர் பேக் ஒன்று தவறி விழுந்தது. அதனை எடுத்த ரவிச்சந்திரன் திறந்து பார்த்தார். அதில் 16 பவுன் தங்க நகைகள் இருந்தன.
இதனையடுத்து 16 பவுன் நகையுடன் லெதர் பேக்கை சிதம்பரம் காவல் நிலையத்தில் போராசியர் தம்பதியர் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்த போது, 16 பவுன் நகை சிதம்பரம் மாரியப்பா நகரைச் சேர்ந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளரான சந்திரமோகனுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது.
இதனையடுத்து பேராசிரியர் தம்பதியர் ரவிச்சந்திரன் - சாந்தா ஆகியோரை எஸ்.பி.பகலவன் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் அவர்கள் கண்டெடுத்த 16 சவரன் நகைகளை சந்திரமோகன் - சாந்தி தம்பதியரிடம் ஒப்படைத்தார்.
அடுத்தவர் பாக்கெட்டில் உள்ள பொருட்களை அவருக்கு தெரியாமல் திருடும் உலகில் யாருக்கும் தெரியாமல் கைக்கு கிடைத்த பல லட்சம் மதிப்புள்ள நகைகளை உரியவர்களிடம் கொடுத்த பேராசிரியர் தம்பதி பாராட்டுக்குரியவர்கள்தான்.












Click it and Unblock the Notifications