நானும் பேசுவேன்..எனக்கும் நோட்டீஸ் அனுப்புங்க: சவால் விடும் மத்திய அமைச்சர்
பரூகாபாத்(உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா பேசியுள்ளது இன்னொரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து அமைச்சர் பொறுப்பில் உள்ளவர்கள் அறிவிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் இதனை மீறி சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தொடர்ந்து பேசிவந்தார். ஒருகட்டத்தில் நான் அப்படித்தான் பேசுவேன்,..தேர்தல் ஆணையம் என்னைத் தூக்கில் போடட்டும் என்றும் பேசினார்.
இதையடுத்து இந்த விவகாரம் குடியரசுத் தலைவர் வரைக்கும் சென்றது. பின்னர் சல்மான் குர்ஷித் கப்சிப் ஆனார். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பரூகாபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், "முஸ்லிம்களின் இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்" என்று பேசினார் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா..
மேலும் தேர்தல் ஆணையத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர், முஸ்லிம்களின் இடஒதுக்கீடு குறித்து பேசுகிறேன்... தேர்தல் ஆணையம் எனக்கு நோட்டீஸ் அனுப்பட்டும் என்றும் சவால் விட்டார்.
இதேபோல் முஸ்லிம்களின் உரிமைக்காக சல்மான் குர்ஷித் நேர்மையாகப் போராடியதாகவும் சுட்டிக்காட்டினார்.
சல்மான் குர்ஷித்தைப் போல இப்போது பேனி பிரசாத் வர்மாவும் பேசியிருப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருவதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.