மும்பை மாநகராட்சியை தக்க வைக்கிறது சிவசேனா
மும்பை: இந்தியாவிலேயே மிக அதிகமாக வருவாய் பெறும் மும்பை மாநகராட்சிக்கான தேர்தலில் சிவசேனா-பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
மராட்டிய மாநிலத்தில் மும்பை மாநகராட்சி உட்பட 10 மாநகராட்சிகள், 27 ஜில்லா பரிஷத்கள் மற்றும் 309 பஞ்சாயத்து சமிதிகளுக்கு கடந்த பிப்ரவரி 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 43 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன.
மும்பை மாநகராட்சி
மும்பை மாநகராட்சிக்கான மொத்தம் உள்ள 227 வார்டுகளில் 215களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் சிவசேனா 71, பாஜக 27 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளதால் மும்பை மாநகராட்சியை மீண்டும் தம் வசமாக்கிக் கொள்ளக்கூடும் எனத் தெரிகிறது.
காங்கிரஸ் 51, தேசியவாத காங்கிரஸ் 15 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளன. ராஜ்தாக்கரேயின் எம்.என்.எஸ். கட்சி 24 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
புனே மாநகராட்சி
புனே மாநகராட்சியைப் பொறுத்தவரையில் தேசியவாத காங்கிரஸ் கூடுதல் வார்டுகளில் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இருப்பினும் அக்கட்சியின் தற்போதைய மேயர் மோகன் சிங் ராஜ்பால் தோல்வியடைந்துள்ளார். புனேயில் மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 152 ஆகும்.
2-வது இடத்துக்கு பாஜக- சிவசேனாவும் ராஜ்தாக்கரேயின் எம்.என்.எஸ். கட்சியும் போட்டிபோட்டு நிற்கின்றன. இம்மாநகராட்சியில் காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் தனித்தே போட்டியிட்டன.
நாக்பூர்
நாக்பூர் மாநகராட்சியில் மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 145.
இம்மாநகராட்சியை பாஜக கைப்பற்றும் வகையில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 2-ம் இடத்தை பெறக்கூடிய நிலையில் உள்ளது.
தானே
தானே மாநகராட்சியை சிவசேனா கைப்பற்றுகிறது. 2-ம் இடத்தில் தேசியவாத காங்கிரஸும் 3-ம் இடம் காங்கிரஸுக்கும் உறுதியாகி உள்ளது.