திண்டிவனம் கொலை வழக்கு-ராமதாஸ் தம்பிக்கு மார்ச் 1ம் தேதி வரை சிறைக் காவல் நீ்ட்டிப்பு
திண்டிவனம் 2006ம் ஆண்டு திண்டிவனத்தில் நடந்த கொலை வழக்கில் கைதாகியுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தம்பி சீனு கவுண்டர் உள்ளிட்ட 10 பேரின் சிறைக் காவல் மார்ச் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது, திண்டிவனத்தில் உள்ள அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டில், பா.ம.க.வினர் புகுந்து, கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். அமைச்சரைக் கொல்லவும் முயன்றனர். இதில் அமைச்சரைக் காப்பாற்ற முயன்ற அவரது உறவினர் முருகானந்தம் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, மருமகன், தம்பி சீனு கவுண்டர் உள்ளிட்டோர் மீது திண்டிவனம் முதலில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் பெயர்களை நீக்கி விட்டு மற்ற 11 பேர் மீது மட்டும் வழக்குத் தொடர்ந்து கைது செய்தனர்.
வழக்கிலிருந்து ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் சிபிஐ விசாரணையையும் கோரியிருந்தார்.
அதை ஏற்று சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கு பின்னர் மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி சிபிஐ அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இந்தக் கொலை வழக்கில், கோபி, இளஞ்செழியன், குமரன், நடராஜன், பன்னீர்செல்வம், ஜெயராஜ், ஆனந்தகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
ஜனவரி 25ம் தேதி, ராமதாசின் தம்பி சீனுவாசன், 2006ம் ஆண்டு தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட கருணாநிதி ஆகியோரைக் கைது செய்தனர். பின்னர் அவர்களை சிபிஐ காவலில் எடுத்து விசாரித்தனர்.
இதையடுத்து நேற்று கைது செய்யப்பட்ட பத்து பேரும் காவல் நீட்டிப்புக்காக செங்கல்பட்டு தலைமை குற்றவியல் கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டனர்.
பின்னர் அனைவரின் சிறைக் காவலையும் மார்ச் 1ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.