வினாத்தாள் அனுப்பாத மனோன்மணியம் பல்கலைக்கு அபராதம்
திருநெல்வேலி: தொலைதூர கல்வி தேர்வில் வினாத்தாள் அனுப்பாத மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு அபராதம் விதித்து நாகர்கோவில் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தொலையாவட்டம் மாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. ராணுவ வீரரான இவர் போபாலில் பணியாற்றி வருகிறார். ராணுவத்தில் அதிகாரியாக பதவி உயர்வு பெற பட்டப்படிப்பு தேவைப்பட்டதால் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி மூலம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் சேர்ந்து படித்து வந்தார்.
2010 டிசம்பர் தேர்வுக்காக கட்டணம் கட்டி நுழைவு சீட்டு பெற்றிருந்தார். தேர்வு மையத்தில் முதல் இரண்டு நாட்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வு எழுதியுள்ளார். அதைத்தொடர்ந்து முக்கிய பாடங்களான மூன்று பாடத்திற்கும் தேர்வு எழுத செல்லும்போது வினாத்தாள் வராத காரணத்தால் தேர்வு எழுதமுடியாமல் வீடு திரும்பியுள்ளார்.
இது குறித்து பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்கப்படவில்லை. இதையடுத்து நாகர்கோவில் நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பாராஜ், உறுப்பினர் சகிலாகுமாரி ஆகியோர் வினாத்தாள்கள் அனுப்பி வைக்காதது சேவை குறைபாட்டை காட்டுகிறது எனவே பாதிக்கப்பட்ட பிரபுவுக்கு நட்ட ஈடாக 5000 ரூபாயும், போக்குவரத்து செலவிற்கு 1500 ரூபாயும், வழக்கு செலவுக்கு 1000 ரூபாயும் பல்கலைக்கழக அதிகாரிகள் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications