இத்தாலியர்களால் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு தமிழக அரசு நிதி உதவி
சென்னை: இத்தாலியர்களால் கொல்லம் கடற்பரப்பில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த தமிழக மீனவர் அஜீஸ் பிங்கோவின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் பூத்துறையைச் சேர்ந்தவர் பிரடிசான் போஸ்கோ. அவருக்குச் சொந்தமான மீன்பிடி கப்பல், கேரள மாநிலம் கொல்லம் கடல் பகுதியில் கடந்த 15-ம் தேதியன்று மீன் பிடிக்கச் சென்ற போது வெளிநாட்டு வணிகக் கப்பலில் இருந்த ஒருவர் சுட்டார்.
அதில், மீன்பிடி கப்பலில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறையைச் சேர்ந்த அந்தோனி சேவியரின் மகன் அஜீஸ் பிங்கோ உயிரிழந்தார்.
அவருடைய குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அஜீஸின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.