சங்கரன்கோவிலில் தொகுதியில் 2.05 லட்சம் வாக்காளர்கள்-வாக்களிக்கப் போவது யாருக்கு?
சங்கரன்கோவில் தொகுதியில் அடுத்த மாதம் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் நேற்று இரவு அறிவித்தது. இடைத்தேர்தல் நடக்கும் சங்கரன்கோவில் தொகுதியில் கடந்த தேர்தலின்போது 230 வாக்கு சாவடிகள் இருந்தன. புதிதாக 12 வாக்கு சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 242 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் 5ம் தேதி சங்கரன்கோவில் தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி சங்கரன்கோவில் தொகுதியில் 2 லட்சத்து 5 ஆயிரம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 1 லட்சத்து 95 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 3 ஆயிரத்து 45 பெண் வாக்காளர்களும் அடங்குவர்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் சங்கரன்கோவில் தொகுதிக்கு நடந்த பொது தேர்தலில் திமுக வேட்பாளர் உமா மகேஸ்வரியை விட 10,395 கூடுதலாக பெற்று அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட கருப்பசாமி வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் அதி்முக, திமுக, பகுஜன் சமாஜ், பாஜக மற்றும் 10 சுயேட்சைகள் உள்பட 14 பேர் போட்டியிட்டனர்.
கடந்த தேர்தல் ஓட்டு விபரம் வருமாறு,
கருப்பசாமி (அதிமுக) - 72,297
உமா மகேஸ்வரி (திமுக) - 61,902
குமார் (பிஎஸ்பி) - 815
சாரதா (பாஜ) - 1862
அய்யனார் (சுயே) - 175
ராஜன் (சுயே) - 135
குணசீலன் (சுயே) - 895
கோமதி நாயகம் (சுயே) - 239
சுப்புலெட்சுமி (சுயே) - 1210
மாடசாமி (சுயே) - 181
மாரியப்பன் (சுயே)- 288
முருகன் (சுயே) - 508
ராஜேந்திரன் (சுயே)- 1917
லட்சுமிநாதன் (சுயே)- 2198
இந்த முறை அதிமுக, திமுக, மதிமுக போட்டியிடுவது உறுதியாக உள்ளது. பாஜகவும் களம் புகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடதுசாரிகள் நிலை தெரியவில்லை. தேமுதிக நிலை தெரியவில்லை. காங்கிரஸ் நிலையும் புரியவில்லை.
இந்தத் தேர்தலை கெளரவப் பிரச்சினையாக மாற்றி விட்டார் முதல்வர் ஜெயலலிதா. இதனால் அதிமுக மீண்டும் வெல்லுமா, அப்படியே வென்றாலும் எவ்வளவு வாக்கு வித்தியாசம் இருக்கும், கடந்த முறையை விட இந்த முறை அதிக வாக்குகள் கிடைக்குமா என்பது உள்ளிட்ட ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் தொகுதி மக்களிடையே அலை மோதிக் கொண்டுள்ளன.