இத்தாலி பாதுகாவலர்கள் மீதான தவறு நிரூபனமானால் தண்டனை-அந்தோணி
டெல்லி: கேரள கடற்பரப்பில் 2 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இத்தாலிய சரக்குக் கப்பலில் வந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி உறுதியளித்துள்ளார்.
கொல்லம் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 2 மீனவர்களை இத்தாலிய சரக்குக் கப்பலில் சென்றோர் சுட்டுக் கொலை செய்தனர். இது தொடர்பாக டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. இச்சம்பவம் தொடர்பாக இத்தாலி கப்பலை கொச்சிக்குக் கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய மீனவர்கள்தான் தங்களது கப்பலை நோக்கி சுட்டதாக இத்தாலிய சரக்குக் கப்பலில் இருந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் இது பொய் எனத் தெரியவந்துள்ளது. முதலில் கடற்கொள்ளையர்கள் என நினைத்துச் சுட்டதாக இத்தாலியர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் இத்தாலியர்கள் கைது செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.