திருப்பூரில் சத்துணவு வழங்காத 7 பள்ளிகள் - மலைவாழ் மக்கள் சங்கம் குற்றச்சாட்டு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 7 அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு கடந்த 5 ஆண்டுகளாக சத்துணவு வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.சண்முகம் குற்றம் சாட்டினார்.
இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை, திருமூர்த்திமலை, கோடந்தூர், கழிஞ்சி, கரும்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மலைவாழ் பழங்குடியினர் நலப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.
இந்த பள்ளிகளில் கடந்த 5 ஆண்டுகளாக, தமிழக அரசின் சத்துணவு திட்டத்தின்கீழ், மாணவ, மாணவியருக்கு சத்துணவு வழங்கப்படவில்லை. இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே பழங்குடியினர் நலப் பள்ளிகளில் சத்துணவு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் மாநிலம் முழுவதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரம் போதுமானதாக இல்லை.
ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு வருவதில்லை என்று பொது மக்கள் புகார் கூறுகின்றன்னர். மாநிலம் முழுவதும் ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியாளர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களை அரசு உடனே நிரப்ப வேண்டும் என்றார்.