கூடங்குளம் எதிர்ப்பாளர்களுடனும் பேசுகிறது வல்லுநர் குழு!
திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட தமிழக அரசின் வல்லுநர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நெல்லையில் நடைபெற்றது..
முன்னதாக நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவருடனான சந்திப்பின் பின் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் இனியன் கூறியதாவது:
கூடங்குளம் பிரச்சினை பற்றி முழுவதும் அறிந்து கொண்டு அறிக்கை தாக்க செய்ய இருக்கிறோம்.
இதற்காக கூடங்குளம் சென்று அணுமின்நிலையத்தை ஆய்வு செய்வோம். நேரம் இருந்தால் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களை சந்தித்து பேசுவோம் அல்லது நாளை சந்திப்போம்.
எதிர்ப்பாளர்கள் நியமித்துள்ள 21 பேர் கொண்ட குழுவை சந்தித்து பேச தயாராக இருக்கிறோம்.
தமிழக அரசு விரைவாக அறிக்கை கொடுக்கும்படி கேட்டு கொண்டுள்ளது. ஆய்வை விரைவாக நடத்தி அறிக்கை கொடுப்போம்.
அணு உலை ஆதரவாளர்கள் பலரை ஏற்கனவே சந்தித்துள்ளோம். நேரம் இருந்தால் அவர்களையும் சந்தித்து பேசுவோம் என்றார் அவர்.
இச்சந்திப்புக்குப் பிறகு கூடங்குளம் அணுமின்நிலையம் பிரச்சினை தொடர்பாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் தமிழக அரசு குழு ஒருங்கிணைப்பாளர் இனியன்,அணுசக்தி கழக முன்னாள் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் அறிவுஒளி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் நெல்லை ஆட்சியர்செல்வராஜ், வருவாய் அதிகாரி உமாமகேஸ்வரி, சேரன்மகாதேவி ஆகியோர் பங்கேற்றனர்.