பாகிஸ்தானில் மசூதி அருகில் குண்டு வெடிப்பு - 21 பேர் பலி, 45 பேர் படுகாயம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள மசூதிக்கு வெளியே தற்கொலைப் படையை சேர்ந்த நபர் ஒருவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் பலியாகினர். மேலும் 45 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் குர்ராம் என்ற மலைப்பிரதேசம் உள்ளது. அங்குள்ள பராஷினர் என்ற மக்கள் அதிகம் கூடும் சந்தை பகுதியின் அருகே மசூதி ஒன்று உள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்து மசூதியில் இருந்து பக்தர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப் படையை சேர்ந்த மர்மநபர், உடலில் சுமந்து வந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார். இதில் விறுவிறுப்பான சந்தை பகுதியி்ல் இருந்த வாகனங்களும், கடைப் பகுதிகளும் சேதமடைந்தன. 21 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 45 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களில் பலரது நிலை பரிதாபமாக இருப்பதால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. காயமடைந்தவர்களை அப்பகுதியினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை.