தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டது, சட்டசபையில் பேச வாய்ப்பில்லை-தேமுதிக கண்டனம்

சென்னை வானகரத்தில் இன்று காலை நடந்த தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் போட்டு நிறைவேற்றியுள்ளனர்.
அதன் விவரம்..
- பஸ் கட்டண உயர்வு மற்றும் பால் விலை உயர்வால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலைக்குக் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் மற்றும் பால் விலையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
- தமிழகம் முழுவதும் 10 மணி நேரத்திற்கும் மேலான மின்வெட்டை அமல்படுத்தியதற்கு இந்த கூட்டம் கண்டனம் தெரிவிக்கிறது. தமிழகத்தை இருண்ட தமிழகமாக மாற்றிய தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
- மின் கட்டணத்தை உயர்த்தும் தமிழக அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று கோரிக்கை வைக்கிறோம்.
- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதே இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வாக அமையும். முல்லைப் பெரியாறு அணை மட்டுமல்லாமல், தமிழகத்தின் நதி நீர்ப் பிரச்சினைகளில் மத்திய அரசு இரட்டை வேடம் போட்டு வருவற்குக் கண்டனம் தெரிவிக்கிறோம்.
- தமிழகத்தின் வேளாண் மற்றும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண தென்னக நதிகளை இணைக்க வேண்டும்.
- கூடங்குளத்தில் மீண்டும் அமைதி திரும்ப மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இந்தியா, இலங்கை இடையே போடப்பட்ட கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய் வேண்டும். கச்சத்தீவை மீட்டு மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். மீனவர்களின் உயிர் மற்றும் உடமைகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
- நீக்கபப்ட்ட மக்கள் நலப் பணியாளர்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும்.
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
- லோக் ஆயுக்தா போன்ற கடுமையான லஞ்ச ஒழிப்பு சட்டத்தையும், அமைப்பையும் தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும்.
- அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும்.
- கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும்.
- கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ. 3000 ஆக உயர்த்த வேண்டும்.
- அரசுப் பள்ளிகளில் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இதற்காக அரசைக் கண்டிக்கிறோம்.
- சட்டசபையில் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அவையில் பாரபட்சமின்றியும், கால அவகாசமின்றியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி தர வேண்டும்.
- தானே புயல் பாதித்த கடலூர், நாகை மாவட்டங்களை இயற்கைப் பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications