சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-பத்மராஜன் உள்பட 3 பேர் இதுவரை மனு தாக்கல்
சங்கரன்கோவில் தொகுதியில் வரும் மார்ச் மாதம் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அதிமுக சார்பில் முத்து செல்வி, திமுக சார்பில் ஜவஹர் சூரியகுமார், மதிமுக சார்பில் டாக்டர் சதன் திருமலைக்குமார் மற்றும் தேமுதிக சார்பில் முத்துக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நேற்று நெல்லையில் முகாமிட்டு தேர்தல் பணிகளை ஆய்வு செய்தார். தேர்தல் அலுவலரக்ளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகின்றது. வாக்குப்பதிவை வெப்-கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியது. வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி விடுமுறை என்பதால் அன்று தவிற பிற நாட்களில் வேட்புமனுக்கள் பெறப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 29ம் தேதி ஆகும். மனுவை திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 3ம் தேதி ஆகும்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று அதிமுக இலவசங்களை வாரி வழங்கி வருகின்றது. இது தவிர திமுக, தேமுதிக மற்றும் மதிமுகவும் தங்கள் திராணியைக் காட்ட முடிவு செய்துள்ளன.
முதல் நாளான இன்று தேர்தலில் போட்டியிடுவதில் கின்னஸ் சாதனை புரிந்த பத்மராஜன் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார். அதேபோல, ராமச்சந்திரன் என்பவரும், ஆறுமுகம் என்றஓய்வு பெற்ற டிஆர்ஓவும் மனு தாக்கல் செய்தனர்.
இதில் ராமச்சந்திரன் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை எதிர்த்து 2 முறை போட்டியிட்டு டெபாசிட்டைப் பறி கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.