தேசிய தொழில் உற்பத்திக் கொள்கை வளர்ச்சிக்கான ஆரம்பம்: டாடா வரவேற்பு
இந்தக் கொள்கையை அமல் செய்வதில் பல்வேறு இடர்ப்பாடுகள் இருந்தாலும் மத்திய அரசு நல்லதொரு நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
என்எம்சிசி அமைப்பு உறுப்பினர்களின் கூட்டம் வெள்ளிக்கிழமையன்று புதுடெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் தொழில்துறையின் அனுபவம் வாய்ந்த நிர்வாக நிபுணர் வி. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் டி.வி.எஸ். தொழில்குழுமத்தின் தலைமை நிர்வாகி வேணு சீனிவாசன், எஸ். குமார்ஸ் தொழில்குழுமத் தலைவர் முகுல் கஸ்லிவால், ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனத் தலைவர் ஒய்.சி. தேவேஷ்வர், பெல் தலைமை நிர்வாகி பி.பி. ராவ், எச்.சி.எல். இன்ஃபோ சிஸ்டம்ஸ் தலைவர், தலைமை நிர்வாகி அஜய் செளத்ரி உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
வேலை வாய்ப்புகள் பெருகும்
கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய டாடா குழுமத் தலைவர் டாடா, மத்திய அரசின் தேசிய தொழில் உற்பத்திக் கொள்கை நல்லதொரு ஆரம்பம் என்று கூறினார்.
"தொழில்துறைக்கு பல்வேறு தடைகள் இருக்கின்றன; அப்படியிருந்தும் அரசு இப்படியொரு கொள்கை தேவை என்று உணர்ந்து அதை வகுத்திருப்பது மட்டுமல்லாமல் அதை அமல்படுத்தவும் உறுதியாக இருப்பது வரவேற்கத்தக்கது. இந்தக் கொள்கை காரணமாக, தேசிய தொழில்துறை உற்பத்தி, முதலீட்டு மண்டலங்களை நிறுவ வழியேற்படும். இதில் டெல்லி - மும்பை தொடர் தொழில்பேட்டை அமைவதும் இந்த மண்டலத்தின் கீழ் வரும். இந்தத் தொழில் முதலீட்டு மையங்கள் ஏற்பட்டு முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வரும்போது 2022-ம் ஆண்டுக்குள் 10 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிவிடும்," என்றார்.
மத்திய – மாநில அரசுகள்
இந்தக் கூட்டத்தில் மத்திய தொழில்துறை, வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவும் கலந்துகொண்டார்.
அவர் கூறுகையில், "வரும் மார்ச் மாதத்துக்குள் இந்தக் கொள்கை தொடர்பான அனைத்து அமைச்சகங்களும் அதைப் படித்துப் பார்த்துவிட்டு அறிவிக்கையை வெளியிட்டாக வேண்டும்
வரிச்சலுகை உள்ளிட்ட நிதிச் சலுகைகளும் இந்தக் கொள்கையில் அடங்கும், அவையெல்லாம் அந்தந்த துறைகள் மூலம் அறிவிக்கையாக வெளியிடப்படும். தொழில் வளர்ச்சிக்கான அடித்தளக் கட்டமைப்பை ஏற்படுத்துவது, தொழில் வளத்துக்கான சூழலை மேம்படுத்துவது, கட்டுப்பாடுகளைச் சுருக்கு எளிமைப்படுத்தி நிர்வாக நடவடிக்கைகளுக்கு உதவுவது ஆகியவையே புதிய கொள்கையின் முக்கிய அம்சமாகும்.
நாட்டின் தேசிய மொத்த உற்பத்தி மதிப்பில் தொழில்துறைகளின் பங்கு இப்போது வெறும் 15% முதல் 16% வரைதான் இருக்கிறது. இதை 25% வரை உயர்த்த வேண்டும் என்று தேசிய உற்பத்திக் கொள்கை இலக்கு நிர்ணயித்துள்ளது," என்றார்.
தேசிய உற்பத்திக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை 2011 அக்டோபரில் ஒப்புதல் வழங்கிவிட்ட போதிலும் தொழிலாளர் நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைகளுக்கும் தொழில் உற்பத்திக்கான துறைக்கும் இடையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.