கலாமின் கனவுத் திட்டம் தோல்வி: அடுத்த சர்ச்சையில் ஜெய்ராம் ரமேஷ்
திருச்சூர்(கேரளா): ஊரகப் பகுதி மக்களுக்கு நகர்ப்புற வசதிகளை அளிக்கும் கலாமின் கனவுத் திட்டம் "புரா' முழுத் தோல்வி அடைந்துவிட்டது என்ற மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சர்ச்சையில் மாட்டிக் கொள்வது நாள்தோறும் வாடிக்கையாகிவிட்டது.
கலாமுக்கு தோல்வி
மத்திய அரசின் சீரமைக்கப்பட்ட "புரா' திட்டத்தை கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், தாலிக்குளம் பஞ்சாயத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது:
இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டம் கலாமின் திட்டத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
கலாமின் திட்டம் முழுத் தோல்வி அடைந்துவிட்டது. இந்தத் திட்டம் வெற்றி அடைய வாய்ப்புள்ளது.
கிராமமாகவும் இல்லாமல், முழுமையான நகரமாகவும் இல்லாமல் உள்ள 3,600 சிறிய நகரங்கள் கடந்த 10 ஆண்டுகளில் உருவாகியுள்ளன.
இவற்றுக்கு சிறந்த குடிநீர், சுகாதார வசதி, தரமான சாலைகள், மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டியுள்ளது என்றார்.
சர்ச்சை
அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு முன்னர் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர். பி.சி.சாக்கோ, தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரதாபன் ஆகியோர் "புரா' திட்டத்தைத் தொடங்கியுள்ளதன் மூலம் கலாம் கனவு நனவாக உள்ளது என்றனர்.
ஆனால் பின்னர் பேசிய ஜெய்ராமோ கலாமுக்கு தோல்வி என்றார்.
மேடையின் பின்திரையில் கலாமின் மிகப் பெரிய உருவப்படமும் இடம்பெற்றிருந்த நிலையில் மத்திய அமைச்சரின் கருத்து சர்ச்சையை உருவாகியிருக்கிறது.