கோவை சட்டக்கல்லூரி மாணவர்களிடையே மோதல்; 5 பேருக்கு அரிவாள் வெட்டு
கோவையை அடுத்த மருதமலை அடிவாரத்தில் அரசு சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது.
இங்கு அடிக்கடி மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும், பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு இரவில் கடையில் சாப்பிட சென்ற சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் மாணவர்களை காவல்துறையினர் தாக்கியதை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அதன்பின்னர் மருதமலை பகுதியில் பொதுமக்களுக்கும், சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பொது மக்கள் மாணவர்களை ஓட, ஓட விரட்டி தாக்கினார்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து முத்தரப்பு சமரச கமிட்டி அமைக்கப்பட்டது.
மோதல் ஏன்?
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சட்டக்கல்லூரி மாணவர்களிடையே கடன் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
கோவை சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவர் இளையராஜா (வயது 22).
இவர் 3-ம் ஆண்டு மாணவர் ஜெயராமனுக்கு ரூ.80 ஆயிரம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் ரூ.47 ஆயிரத்தை ஜெயராமன் திருப்பி கொடுத்து விட்டார்.
இந்த நிலையில் மீதிப்பணத்தை கேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து இளையராஜாவின் நண்பர்களான 4 மாணவர்கள் ஜெயராமனை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயராமனின் நண்பர்கள் கணேசன், சுந்தர் ஆகியோர் இளையராஜாவின் நண்பர்களை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினரும் வடவள்ளி போலீசில் புகார் செய்தனர்.
இதைத்தொடர்ந்து சட்டக்கல்லூரி முதல்வர் ராமசாமி, இரு தரப்பை சேர்ந்த 20 மாணவர்களை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இது இரு தரப்பு மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட இரு தரப்பை சேர்ந்த 20 மாணவர்களும் விசாரணைக்காக வரவழைக்கப்பட்டனர்.
காலை 11 மணியளவில் இரு தரப்பை சேர்ந்த மாணவர்களும் கல்லூரி முதல்வர் அறை முன்பு கூடியபோது அவர்களுக்குள் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இது முற்றவே ஒருவரையொருவர் தாக்க தொடங்கினார்கள். அப்போது மாணவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு கம்பியால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
5 பேருக்கு வெட்டு
தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
அரிவாள் வெட்டில் காயம் அடைந்த மாணவர்கள் வெள்ளைச்சாமி (முதலாண்டு), சிவா, ஆனந்தராஜ் (3-ம் ஆண்டு), சசிகுமார், சுந்தர் (4-ம் ஆண்டு) ஆகிய 5 பேர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மாணவர்களின் மோதல் எதிரொலியாக அரசு சட்டக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது.