அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது - கிருஷ்ணசாமி பேட்டி
நெல்லை: அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டுமெனில் அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள 32 அமைச்சர்களை முதலமைச்சர் ஜெயலலிதா விலக்கி கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெள்ளிக்கிழமையன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
அதிமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும் மின்வெட்டு குறையவில்லை. அண்மை காலமாக சட்டம் ஓழுங்கு சீர்குலைந்து விட்டது. கொலை, கொள்ளைகள் அதிகரித்துள்ளன. சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று கூறி போலீசார் 5 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வேறு எங்கெல்லாம் கொள்ளையடித்தார்கள் என விசாரித்து இருக்கலாம்.
இந்திய அரசியல் சட்டப்படி நீதித்துறை அனுமதியில்லாமல் யாருடைய உயிரையும் பறிக்க முடியாது. 5 பேரையும் சுட்டுக் கொன்றது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பாளை சித்தா கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசு உடனடி தீர்வு காண வேண்டும். மாணவர்கள் படிப்பை தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்களை அனுப்பியது தவறு. அங்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடக்க அவர்களை விலக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications