கூடங்குளத்துக்கு எதிராக சென்னையில் பிரம்மாண்ட பேரணி
சென்னை: கூடங்குளம் அணு மின்நிலையத்தை எதிர்த்து சென்னையில் பிரம்மாண்ட ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது.
ஊர்வலம்
எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார்.
கூடங்குளம் அணுமின்நிலைய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் முன்னிலை வகித்தார். அணுமின்நிலையத்தால் மக்களுக்கு ஆபத்து என்பதை குறிக்கும் வகையில் எலும்புக்கூடு முகத்தோற்றம் கொண்ட பனியன்களை பெரும்பாலானோர் அணிந்திருந்தனர்.
முழக்கங்கள்
ஒரு போதும் கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறக்கவிடமாட்டோம், இது கூடங்குளம் மக்களின் போராட்டம் மட்டுமல்ல வருங்கால தமிழ் இன சந்ததிகளை காக்கும் போராட்டம், நெய்வேலி என்.எல்.சி. மின்சாரத்தை தமிழகத்திற்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்கள் ஊர்வலத்தில் எழுப்பப்பட்டன.
ஊர்வலம் புதுப்பேட்டை சாலையைக் கடந்து சிந்தாதிரி பேட்டை பாலம் அருகே முடிந்தது. ஊர்வலத்தின் முடிவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டம்
பின்னர் மாலையில் தியாகராயர் நகர் முத்துரங்கன் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் பேசியதாவது:
கூடங்குளம் அணுமின்நிலையம் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதயகுமார் தலைமையில் அறவழியில் கடந்த 7 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. மக்கள் தொடங்கிய இந்த போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் விரிவடைந்துள்ளது.
மக்கள் திரள் போராட்டமாக வெடித்திருக்கிறது. அவர்கள் கூடங்குளம் பகுதி மக்களுக்காக மட்டும் போராடவில்லை, ஒட்டு மொத்த தமிழர்களுக்காக போராடுகிறார்கள்.
கூடங்குளம் அணுமின்நிலையம் வந்தால் தென்தமிழகம் முழுவதும் பாதிப்பு ஏற்படும். பாதிப்பு ஏற்படும் மக்களுக்கு தமிழக அரசு தூணாக இருந்து உணர்ந்து செயல்படவேண்டும்.
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் ஏற்படுத்தினால் மாநில மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எண்ணி முதல்-அமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு குரல் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து 10 மாநில முதல்-அமைச்சர்கள் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். இதையொட்டி தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதில் பின்வாங்கும் நிலையை பிரதமர் மன்மோகன்சிங் எடுத்துள்ளார்.
எனவே கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் அவர்.
உதயகுமார்
கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேசியதாவது:
கூடங்குளம் மக்களின் திருப்திதான் தமிழக அரசின் திருப்தி என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியிருந்தார். அவர் அந்த நிலையில் இருந்து மாறவில்லை. இந்த பிரச்சினையில் தமிழக மக்களுக்காக ஜெயலலிதா உழைப்பார் என்று நம்புகிறோம்.
நாங்கள் தூய்மையாக இருக்கிறோம், உண்மையாக இருக்கிறோம், துணிச்சலாக இருக்கிறோம். எந்த நிலையிலும் பின்வாங்கமாட்டோம்.எத்தனை ஆண்டானாலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தையும், கல்பாக்கம் அணு மின்நிலையத்தையும் மூடும்வரை போராடுவோம் என்றார்.
கொளத்தூர் மணி, சீமான்
கூட்டத்தில் ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பா.ம.க.பிரமுகர் வடிவேல் ராவணன், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
ஊர்வலத்திலும் பொதுக்கூட்டத்திலும் பறையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் அணுசக்திக்கு எதிரான பிரச்சாரம் வெளிப்படுத்தப்பட்டது.