இடைத்தேர்தலில் அமைச்சர்கள் பிரச்சாரம் செய்வதை தடுக்க சட்டம் வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: இடைத்தேர்தலில் அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பிரச்சாரம் செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மதுரையில் ஏப்ரல் 28 மற்றும் 29ம் ஆகிய தேதிகளில் தாமரை சங்கம மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு தமிழகத்தில் பாஜகவுக்கு திருப்பு முனையாக அமையும். இதில் புதிய உறுப்பினர்கள் லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.
தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு ஒரு நாள் விடுமுறை என்பது தினக்கூலி தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்சனையில் நடப்பது என்ன என்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி என்ற கோஷத்துடன் சங்கரன்கோயில் இடைத்தேர்தலை பாஜக எதிர்கொள்ளும். இடைத்தேர்தல்களில் அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பிரச்சாரம் செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.