போலீஸ் விசாரணை முடிந்தது-நடராஜனை மார்ச் 14 வரை சிறையில் அடைக்க உத்தரவு
தஞ்சாவூர்: சசிகலாவின் கணவர் நடராஜனை நேற்று மாலை 6 மணி முதல் தீவிரமாக விசாரித்த தஞ்சாவூர் போலீஸார் இன்று அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை மார்ச் 14ம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
தஞ்சை அருகே விளார் பைபாஸ் சாலையில் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சி செய்ததாக சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் நடராஜன், அவரது அக்காள் மகன் சின்னையா என்ற வெங்கடேஷ், குபேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நடராஜன், சின்னையா என்ற வெங்கடேஷ், குபேந்திரன் ஆகிய 3 பேரையும் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் தஞ்சை 2வது நீதித்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்தனர். இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.
இதையடுத்து நடராஜன், சின்னையா, குபேந்திரன் ஆகிய 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டனர். 12.30 மணிக்கு போலீஸ் காவல் மனு தொடர்பாக விசாரணை மாஜிஸ்திரேட்டு முருகன் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது மாஜிஸ்திரேட்டிடம் நடராஜன் கூறுகையில்,
விளார் பைபாஸ் சாலையில் முள்ளிவாய்க்கால் படுகொலையில் இறந்தவர்களின் நினைவாக ஈகைத்தூண் உலகத்தமிழர் பேரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையில் நான் உறுப்பினர் கிடையாது. அதில் எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. தேவை இல்லாமல் என் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. நான் கைது செய்யப்பட்ட பின்னர் தான் என் மீது வழக்கு பதிவு செய்தனர்.
நான் சிறையில் இருக்கும் போது நள்ளிரவில் போலீசார் வந்து என்னை உளவு பார்க்கிறார்கள். தற்போது பல என்கவுன்ட்டர்கள் நடக்கிறது. எனவே போலீஸ் காவலில் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனவே என்னை போலீஸ்காவலுக்கு அனுமதிக்க வேண்டாம் என்று கோரினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட், வழக்கு தொடர்பாக நடராஜனை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து நடராஜனை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
விடிய விடிய நடராஜனிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் இன்று பிற்பகலில் மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் போலீஸார். பிறகு நடராஜனை மார்ச் 14ம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் நடராஜனை மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.