ஆந்திர இடைத்தேர்தல்: 7 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாத காங்கிரஸ், தெலுங்கு தேசம்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் கோவூர், மஹபூப்நகர், நாகர்கர்ணூல், ஆதிலாபாத், ஸ்டேஷன் கன்பூர், காமாரெட்டி, கொல்லாபூர் ஆகிய 7 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸும், தெலுங்கு தேசமும் வெல்லவில்லை.
ஆந்திர மாநிலத்தில் கோவூர், மஹபூப்நகர், நாகர்கர்ணூல், ஆதிலாபாத், ஸ்டேஷன் கன்பூர், காமாரெட்டி, கொல்லாபூர் ஆகிய 7 தொகுதிகளில் கடந்த 18ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அதி்ல் கோவூர் தொகுதியில் மட்டும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போட்டியிட்டது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் 7 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி கட்சி 5 இடங்களில் போட்டியிட்டது.
இந்நிலையில் இன்று இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கோவூர் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸும், மஹபூப்நகரில் பாஜகவும், நகர்கர்ணூலில் நாகம் ஜனார்த்தன ரெட்டி என்ற சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.
கொல்லாபூர், ஸ்டேஷன் கன்பூர், ஆதிலாபாத் மற்றும் காமாரெட்டியில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
ஆளுங்கட்சியான காங்கிரஸுக்கும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. சுயேச்சை வேட்பாளரான நாகம் ஜனார்த்தன ரெட்டி தெலுங்கானா விவகாரம் தொடர்பாக எழுந்த பிரச்சனையில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.