நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிலக்கரி ஏல ஊழலால் கடும் அமளி !
டெல்லி: நிலக்கரி இருப்புகள் வர்த்தக நோக்குடன் ஏலம் விடப்படாததால் அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக மத்திய தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ள தகவல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எதிரொலித்தது.
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனையை கிளப்பின. மாநிலங்களவையில் இது தொடர்பாக பாஜகவின் பிரகாஷ் ஜவேத்கர் பேசியதாவது:
இந்த நாட்டை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொள்ளையடித்து வருகிறது. இங்கே கொள்ளையர்களின் ராஜாங்கம்தான் நடைபெறுகிறது. பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க நாங்கள் நோட்டீஸ் கொடுத்தும் பயனில்லை. தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான ஊழல் மலிந்த அரசு இது என்றார்.
நிலக்கரி ஏல ஊழல் விவகாரம் மிகவும் மோசமானது என்பது இடதுசாரிகளின் கருத்து. இது தொடர்பாக மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பேசியதாவது:
நாட்டின் வரலாற்றில் நடந்துள்ள மிகப்பெரிய ஊழல் இது. பெரிய நிறுவனங்களுக்காக மட்டுமே அரசாங்கம் கொள்கைகளை வகுத்து வருகிறது. கனிம வளம் என்பது நாட்டின் சொத்து. இதை முறையாக ஏலம் விடாது எதற்காக? பிரதமர் மன்மோகன்சிங் உரிய பதிலளிக்க வேண்டும் என்றார்.
இவ்விவகாரம் குறித்து மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சீத்தாரம் யெச்சூரி பேசுகையில், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலை விட மிகப்பெரிய ஊழல் இது. இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார். எதிர்க்கட்சிகளின் அமளியையடுத்து இருஅவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.
நிலக்கரி ஏல ஊழல்
மின்சார உற்பத்திக்காக அனல்மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி வர்த்தக ரீதியாக , அரசிற்கு சொந்தமான சுரங்கங்கங்களிலிருந்து ஏலம் விடப்படுகிறது. இவ்வாறு ஏலம்விடப்படாமல் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலத்தி்ல் அரசுக்கு ரூ. 10.7 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக மத்திய தணிக்கை ஜெனரல் (சி.ஏ.ஜி) கூறியுள்ளது.
இது தொடர்பாக சி.ஏ.ஜி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் அரசிற்கு சொந்தமான 155 நிலக்கரி சுரங்கங்கங்களிலிருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு , அனல்மின்நிலையங்களுக்கு மின் உற்பத்தி மற்றும் சிமெண்ட் உற்பத்திக்காக வர்த்தகரீதியில் ஏலம் வாயிலாக விற்கப்படுகிறது. இதில் தனியாருக்கு ஏலம் விடப்படாமல் ரூ.4.76 லட்ம் கோடியும், அரசு பயன்பாட்டிற்கு ஏலம்விடாமல் ரூ. 5.88 லட்சம் கோடி என ரூ.10.7 கோடி வருவாய் இழப்பீடுஏற்பட்டுள்ளது.
இந்த வருவாய் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2011--ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை கணக்கிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.