பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில் கட்டண உயர்வு வாபஸ்: முகுல் ராய் அறிவிப்பு

கடந்த 15ம் தேதி ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி, பயணிகள் கட்டணத்தை மிகவும் குறைவாகவே உயர்த்தினார்.
ஆனால், அதற்கு அவரது கட்சியான திரிணாமுல் காங்கிரசின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
அவர் தந்த நெருக்கடியால் கடந்த 18ம் தேதி இரவு தினேஷ் திரிவேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. இதையடுத்து அதே கட்சியைச் சேர்ந்த முகுல் ராய் புதிய ரயில்வே அமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 2ம் வகுப்பு ரயில் கட்டண உயர்வு வாபஸ் பெறப்படுவதாக அமைச்சர் முகுல் ராய் இன்று மக்களவையில் அறிவித்துள்ளார். மேலும் 3ம் வகுப்பு ஏ.சி ரயில் கட்டண உயர்வையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
அதே நேரத்தில் முதல் வகுப்பு ஏ.சி மற்றும் 2ம் வகுப்பு ஏ.சி கட்டண உயர்வில் எந்தவித மாற்றம் இல்லை என்றும் அறிவித்துள்ளார்.
ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே ரயில் கட்டண உயர்வு திரும்பப் பெற்றதாக முகுல் ராய் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications