நெருக்கடி கொடுக்கும் வங்கிகள்: ஆட்குறைப்பு செய்யும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்?

ஆட்குறைப்பு
நிதிநெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையே நீடித்து வருகிறது. இதனால் பலரும் வேறு நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில் தமது ஊழியர்களில் கணிசமான எண்ணிக்கையில் ஆட்குறைப்பு செய்ய கிங்பிஷர் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல் தற்போது இயக்கப்படும் வழித்தடங்கள் பலவற்றையும் குறைக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கொச்சி, லக்னோ
கேரள மாநிலம் கொச்சி, உத்தரப்பிரதேசத்தின் லக்னோ ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகளை முழுவதும் ரத்து செய்துள்ளது. கொச்சியிலிருந்து விமான சேவையை நிறுத்தியுள்ளதன் மூலம் லட்சத்தீவின் அகட்டிக்கான சேவையும் ரத்தாகிறது. இதனால் லட்சத்தீவின் அகட்டிக்கு தற்போது ஏர் இந்தியா விமான சேவை மட்டுமே உள்ளது. கொச்சியிலிருந்து கடந்த ஆண்டு கோடை காலத்தில் மும்பை,சென்னை மற்றும் அகட்டிக்கு ஒரு வாரத்துக்கு 63 விமானங்களை கிங்பிஷர் நிறுவனம் இயக்கியது.
இதேபோல் லக்னோ-டெல்லி மார்க்க சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 600 பேர் கிங்பிஷர் ஏரலைன்ஸ் மூலம் பயணித்து வந்தனர். இந்நிலையில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை இந்த சேவையும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள்
இதனிடையே வங்கிகளும் கிங்பிஷர் நிறுவனத்துக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளன. பொதுத்துறை வங்கிகளிடமிருந்து மட்டும் அந்நிறுவனம் ரூ.5,000 கோடி கடன் பெற்றுள்ளது. தாம் கொடுத்த கடனுக்காக கூடுதல் சொத்துகளை அடமானம் வைக்குமாறு தனியார் வங்கியான ஐ.சி.சி.ஐ. நெருக்கடி கொடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications