எடியூரப்பா சிற்றுண்டி.. சதானந்த கெளடா மதிய விருந்து.. கர்நாடகத்தில் பாஜக கோஷ்டிகள் 'சாப்பாடு பாலிடி
பெங்களூரில் உள்ள எடியூரப்பாவின் வீட்டில் இன்று காலை சிற்றுண்டி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அவரது ஆதரவு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்,
எடியூரப்பாவுக்கு மீண்டும் கர்நாடக முதல்வர் பதவியை கட்சி மேலிடம் வழங்க வைப்பதற்காக எப்படி நெருக்கடி கொடுப்பது என்ற வியூகம் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில சட்டப்பேரவையின் நிதிநிலை கூட்டத்தொடரின் கடைசி நாளன்று நடத்தப்பட்டுள்ள இந்த "சிற்றுண்டி" கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கர்நாடக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக தமது ஆதரவு எம்.எல்.ஏக்களை உல்லாச விடுதி ஒன்றில் தங்க வைத்து கட்சி மேலிடத்துக்கு எடியூரப்பா நெருக்கடி கொடுத்திருந்தார். அதன் பிறகு டெல்லி வரை சென்று முட்டி மோதியும் எதுவித பலனும் ஏற்படாத நிலையில் இனி எந்தப் பதவியும் கேட்கப்போவதில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் 64 ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொண்ட தம்மை முதல்வராக்க வேண்டும் என்று எடியூரப்பா மீண்டும் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்.
இந்த சிற்றுண்டிக்குப் போட்டியாக முதல்வர் சதானந்த கெளடாவின் ஆதரவாளரான அமைச்சர் கோவிந்த் இன்று மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் கெளடா ஆதரவு எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். சிலர் இரு விருந்துகளிலும் கலந்து கொண்டனர்.