சிபிஐ, மதிமுக, திருமாவை விட்டு விட்டு எம்.பிக்கள் குழு 16ம் தேதி இலங்கை பயணம்!
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான எம்.பிக்கள் குழு வருகிற 16ம் தேதி இலங்கை செல்கிறது. அங்கு 25ம் தேதி வரை அவர்கள் சுற்றுபப்யணம் செய்யவுள்ளனர்.
தமிழர் பகுதிளில் இந்தக் குழு சுற்றுப்பயணம் செய்து இந்திய அரசின் சார்பில் மற்றும் இலங்க அரசின் சார்பில் செய்யப்பட்டு வரும் மறுவாழ்வு நடவடிக்ககைகளைப் பார்த்து ஆய்வு செய்யவுள்ளது.
இந்த எம்.பிக்கள் குழுவில் தமிழகத்திலிருந்து பெரும்பாலான கட்சிகளை மத்திய அரசு சேர்க்கவில்லை. கடந்த முறை இலங்கை போய் ராஜபக்சேவை சந்தித்து காபி, டீ சாப்பிட்டு விட்டு, அவருடன் கை குலுக்கி சந்தோஷமாக புகைப்படத்திற்குப் போஸ் கொடுத்து விட்டு வந்த திமுகவுக்கு மட்டுமே இந்த முறையும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கூடவே காங்கிரஸ் கட்சியையும் சேர்த்துள்ளனர். கடந்த முறை போன திருமாவளவனைக் கூட இந்த முறை சேர்க்கவில்லை.
அதேபோல தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு அழைப்பு அனுப்பியுள்ளனராம். ஆனால் அக்கட்சி பங்கேற்கிறதா என்பது குறித்துத் தெரியவில்லை. மேலும் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லையாம். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், இதுதொடர்பாக எங்களுக்கு எந்தவிதமான தகவலும் இல்லை என்றார்.
மத்திய அரசின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று மதிமுக, திருமாவளவனை மத்திய அரசு கழற்றி விட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் இலங்கை அரசின் ஒப்புதலைப் பெற்ற கட்சிகளை மட்டுமே குழுவில் சேர்த்திருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவில், திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் மாணிக் தாகூர், கிருஷ்ணசாமி, என்எஸ்வி சித்தன், சுதர்சன நாச்சியப்பன், பாஜக சார்பில் வெங்கையா நாயுடு மற்றும் சில வட மாநில எம்.பிக்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.