மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி, மனுதாரருக்கு ரூ.5 லட்சம் அபராதம்: ஹைகோர்ட் அதிரடி

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக அண்ணா சாலையில் உள்ள பி.ஆர். அன்ட் சன்ஸ் நிறுவனம் இயங்கும் கட்டிடத்தின் பின்பகுதியில் உள்ள நிலத்தை ஆர்ஜிதம் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதை எதிர்த்து தேசிய பாரம்பரிய கலாசாரம் மற்றும் கட்டிட பாதுகாப்பு அறக்கட்டளையின் அமைப்பாளர் ஸ்ரீராம் வெங்கடகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பி.ஆர். அன்ட் சன்ஸ் நிறுவனம் இயங்கும் கட்டிடம் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு பின்புறம் இருக்கும் நிலத்தை ஆர்ஜிதம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
மனுதாரர் குறிப்பிடும் இடம் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் உள்ளதா என்பது பற்றி தகவல் அளிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு (சி.எம்.டி.ஏ.) மெட்ரோ ரயில் நிர்வாகம் கடிதம் எழுதியது. அதன்படி ஆய்வு நடத்தப்பட்டது.
பி.ஆர். அன்ட் சன்ஸ் நிறுவனம் உள்ள இடம்தான் பாரம்பரிய சின்னம். அதற்கு பின்னால் உள்ள பகுதி பாரம்பரிய பகுதி அல்ல என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சி.எம்.டி.ஏ. கூறியது. அதன் பின்னர் அந்த இடத்தை ஆர்ஜிதம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த கட்டிடத்தின் உரிமையாளர்கள் நில ஆர்ஜித நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அந்த இடம் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் இல்லை என்று உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு மாறாக மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் தமிழக அரசின் பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக உள்ளார். அந்த குழு கூட்டத்தில் பிரச்சினைக்குள்ள இடம், பாரம்பரிய கட்டிடம் உள்ள இடம் இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால் இவ்வளவு தெரிந்த பிறகும், குழு உறுப்பினராக இருந்து கொண்டே அந்த குழு எடுத்த முடிவை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார். உறுப்பினர் பதவியில் இருந்து விலகி இந்த வழக்கை அவர் தாக்கல் செய்திருக்கலாம்.
இந்த தவறான வழக்கை தாக்கல் செய்து மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார். எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதோடு, வழக்கு செலவாக ரூ.5 லட்சத்தை தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணை குழுவுக்கு அவர் வழங்க வேண்டும்.அந்த குழுவிலிருந்து மனுதாரரை தமிழக அரசு நீக்க வேண்டும். அவருக்கு பதிலாக தகுதியுள்ளவரை குழு உறுப்பினராக அரசு நியமிக்க வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications