காதலித்து மோசடி: பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரி மீது ஹைகோர்ட்டில் பெண் வழக்கு
சென்னை: திருமணம் செய்வதாக கூறி காதலித்து மோசடி செய்த பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளம் பெண் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நான், ஓய்வு பெற்ற போலீஸ் துணை சூப்பிரண்டின் மகள். சென்னையில் ஐ.ஏ.எஸ். படிப்பதற்காக 2007-ம் ஆண்டு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தேன். அப்போது வருண்குமார் எனக்கு அறிமுகமானார். எங்களுக்குள் நட்பு ஏற்பட்டு அது காதலானது. எங்களின் காதல், அவரது பெற்றோருக்கு தெரிந்தது. எங்கள் காதலை அங்கீகரித்ததோடு, திருமணத்துக்கும் சம்மதித்தனர்.
2010-ம் ஆண்டு நடந்த முதற்கட்ட தேர்வில் வருண்குமார் தேர்வானார். நான் தேர்ச்சி அடையவில்லை. மீண்டும் அந்தத் தேர்வை எழுத விரும்பினேன். ஆனால் அவருக்கு அடுத்த தேர்வுக்கு நான் உதவி செய்ய வேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். முக்கிய தேர்வை வருண்குமார் முடித்த பின்னர் நேர்முகத் தேர்வுக்கான உதவிகளை, அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க டெல்லியிலே அவருடன் இருந்து நான் செய்துவந்தேன். எல்லாரிடமும் என்னை தனது வாழ்க்கைத் துணை என்றே அறிமுகம் செய்து வைத்தார். எனது பெற்றோரும் சம்மத்தித்த நிலையில் 2011-ம் ஆண்டு இறுதியில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மே மாதம் முக்கிய தேர்வில் அவர் வெற்றி பெற்று, ஐ.பி.எஸ். அதிகாரியாக முடிவு செய்தார்.
திருமணம் செய்ய மறுப்பு
அதன் பின்னர் அவர் மற்றும் அவரது பெற்றோரின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. திருமணத்துக்கு வரதட்சணையாக 2 கிலோ தங்க நகை, ரூ.50 லட்சம் ரொக்கம், பி.எம்.டபுள்ï கார் ஆகியவற்றை கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். அந்த வரதட்சணையை தர தயாராக இருக்கும், தன்னுடன் ஐ.பி.எஸ். பயிற்சி பெறும் பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக வருண்குமார் தெரிவித்தார். இனிமேல் நான் அவரை திருமணம் செய்ய வற்புறுத்தினால், போலீஸ் அதிகாரத்தை காட்டி பொய் வழக்கு போட்டுவிடிவேன் என்று மிரட்டல் விடுத்தார். அதோடு என்னை தற்கொலை செய்துகொள் என்றும் வற்புறுத்தினார்.
எனவே நான் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். அது வடபழனி போலீசுக்கு மாற்றப்பட்டது. பின்னர் அங்கிருந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. பின்னர் அங்கிருந்து வரதட்சணை தடுப்பு புகார் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவர்கள் அனைவரும் விசாரணை நடத்திய பிறகு எனது புகார் மாவட்ட சமூகநல அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது
எங்களுக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை.ஆனால் திருமணமானவர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளை மட்டும் விசாரிக்கும் சமூகநல அதிகாரியிடம் அனுப்பியுள்ளனர். எனவே உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். அவர் மீது குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரினேன்.
சமூகநல அதிகாரியின் அறிக்கையை பெற்ற பிறகு தேவையான கோரிக்கைகளுடன் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறி எனது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். எங்களிடம் விசாரணை நடத்திய பிறகும் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. ஏதோ காரணத்துக்காக சமூகநல அதிகாரி தயக்கம் காட்டுகிறார்.
எனவே அவரிடம் இருந்து சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் வரதட்சணை தடுப்புப் பிரிவு போலீசார் அறிக்கையை பெற்று நான் ஏற்கனவே கொடுத்த புகாரின் அடிப்படையில் வருண்குமார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, பிரியதர்ஷினியின் இந்த மனுவுக்கு 12-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி போலீஸ் கமிஷனர், வரதட்சணை தடுப்பு உதவி கமிஷனர், சமூகநல அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டார்.