நெல்லையில் இருந்து நாகர்கோவில், கோவா வழியாக மும்பைக்கு கோடைகால சிறப்பு ரயில்
நெல்லை: நெல்லையில் இருந்து மும்பைக்கு நாகர்கோவில், கோவா வழியாக கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மத்திய ரயில்வே திருநெல்வேலி-மும்பை வழி தடத்தில் 01068/01067 எண் கொண்ட வராந்திர சிறப்பு ரயிலை இயக்கி வருகிறது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து 01068 எண் கொண்ட ரயிலாக ஒவ்வொரு திங்கள்கிழமை மதியம் 1 மணிக்கு புறப்பட்டு வள்ளியூர், நாகர்கோவில் டவுன், இரணியல், குழித்துறை, திருவனந்தபுரம், கொல்லம், கோட்டையம், எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணணுர், மங்களுர், கோவா வழியாக செவ்வாய் இரவு 11:45 மணிக்கு மும்பை சேருகிறது. மறுமார்க்கத்தில் 01067 எண் கொண்ட ரயிலாக மும்பையிலிருந்து சனிக்கிழமை மாலை 4:55 மணிக்கு புறப்பட்டு திங்கள்கிழமை அதிகாலை 05:55 மணிக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து 33 மணி நேரம் 25 நிமிடங்களில் மும்பைக்கு போய் சேருகிறது.
குமரி மாவட்ட பயணிகளின் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் வள்ளியூர், இரணியல், குழித்துறை ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இவ்வாறு வள்ளியூர், இரணியல், குழித்துறை ரயில் நிலையத்தில் நின்று செல்வதால் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். இந்த ரயில் மூலம் கேரளாவிற்கு பல்வேறு தொழில்கள் நிமித்தமாக செல்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இந்த ரயில் புகழ்பெற்ற சுற்றுலா இடமாக கோவா(மடகான்) வழியாக செல்கிறது சிறப்பம்சம் ஆகும். இந்த ரயிலில் குளிர்சாதன இரண்டு அடுக்கு ஒரு பெட்டி, குளிர்சாதன மூன்று அடுக்கு இரண்டு பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிகள் கொண்ட இருபது பெட்டிகள் மற்றும் மூன்று முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் உள்ளன.
இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து மும்பை செல்லும்போது வள்ளியூருக்கு மதியம் 1:40 மணிக்கும், நாகர்கோவிலுக்கு மதியம் 2:20க்கும், இரணியலுக்கு மதியம் 2:40 க்கும், குழித்துறை ரயில் நிலையத்துக்கு மதியம் 2:55 மணிக்கும் வந்து செல்கிறது. இதை போல் மறுமார்க்கம் குழித்துறைக்கு அதிகாலை 2:30 மணிக்கும், இரணியலுக்கு 2:50 மணிக்கும், நாகர்கோவில் டவுனுக்கு 3:05க்கும், வள்ளியூருக்கு 3:40 மணிக்கும் வருகிறது.
இந்த ரயிலின் கடைசி சேவை ஜுன் மாதம் முதல் வாரத்துடன் முடிகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடந்து கொண்டிருக்கின்றது. இந்த ரயிலை ஏராளமான குமரி மற்றும் நெல்லை மாவட்ட பயணிகள் உபயோகித்தால் நிரந்தரமாக இயக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது. ஆகவே கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் இந்த சிறப்பு ரயிலை அதிகமாக முன்பதிவு செய்து பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.