இந்திய எம்.பிக்களின் இலங்கை பயணம் கைவிடப்படுமா?

இலங்கை செல்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய எம்.பிக்கள் குழுவைப் பார்த்தால்,அதில் இலங்கைத் தமிழர்கள் பால் தீவிரமான பற்றோ அல்லது ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து ரத்தக் கண்ணீர் விடும் அளவோ அல்லது உண்மையான மறு சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு குறித்து அக்கறை காட்டுவோரை விரல் விட்டு எண்ணி விடலாம்.
காரணம், அந்தக் குழுவில் மதிமுகவிலிருந்து யாரும் இல்லை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து யாரும் இல்லை, விடுதலைச் சிறுத்தைகள் இல்லை.
மாறாக ஈழத் தமிழர்களுக்காக பெரிய அளவில் எதுவும் செய்து விடாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐந்து பேரைச் சேர்த்துள்ளனர். தமிழகத்திலிருந்து ஈழத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவர்களை அதில் சேர்க்கவில்லை. மாறாக வட இந்தியாவைச் சேர்ந்த எம்.பிக்களை அதிகம் இணைத்துள்ளனர். இவர்களுக்கு ஈழப் பிரச்சினை என்ன என்று கூட முழுமையாகத் தெரியாது.
சுஷ்மா சுவராஜ் போன்ற மூத்த தலைவர்களுக்கே கூட சமீபகாலத்தில்தான் இந்தப் பிரச்சினை குறித்து அரை குறையாக தெரிந்தது. இப்படி இருக்கையில், திருமாவளவன், மதிமுக, சிபிஐ போன்றவர்களை சேர்க்காமல் போனதற்கு ராஜபக்சே அரசு கொடுத்த நெருக்குதல்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்தக் குழுவிலிருந்து தற்போது அதிமுகவும் கூட விலகி விட்டது. இதனால் மத்திய அரசு குழப்பமடைந்துள்ளது. தற்போது இலங்கையைப் பொறுத்தவரை இந்தியா வேண்டாத விருந்தாளியாக மாறி விட்டது. இந்த நிலையில் குழப்பமான சூழ்நிலையில் எம்.பிக்கள் குழுவை அனுப்புவது குறித்து மத்திய அரசும் கூட யோசனையில் இருப்பதாக தெரிகிறது.
இந்தக் குழுவில் முன்பு வெங்கையா நாயுடு இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவருக்கு ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஓரளவுக்குத் தெரியும். அதேபோல பாஜகவைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர் சேர்க்கப்பட்டிருந்தால் தைரியமாக நாலு வார்த்தையாவது ராஜபக்சேவிடம் பேச வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் இவர்களை மத்திய அரசு சேர்க்கவில்லை.
மாறாக, எம்.கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், மாணிக்க தாகூர் என சம்பந்தமில்லாதவர்களை சேர்த்துள்ளனர். இதில் மாணிக்க தாகூர் ராகுல் காந்தி கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதிலும் கோஷ்டி இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கடைப்பிடித்துள்ளதோ என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஈழத் தமிழர்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்ற அளவில்தான் தற்போதைய உறுப்பினர்கள் பலரும் உள்ளனர். இப்படி ஒரு குழுவை எதற்காக, எந்த நோக்கத்திற்காக மத்திய அரசு இலங்கைக்கு அனுப்பவுள்ளது என்பதும் புரியவில்லை.












Click it and Unblock the Notifications