வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப் பயணம்: மியான்மரில் இங்கிலாந்து பிரதமர்!
யாங்கூன்: தெற்காசிய நாடுகளில் இரும்புத்திரை நாடாக இருந்துவந்த மியான்மருக்கு இங்கிலாந்து பிரதமர் கேமரூன் இன்று பயணம் மேற்கொண்டது ஒரு வரலாற்று பதிவாக கருதப்படுகிறது.
ராணுவ ஆட்சியால் மேற்குலக நாடுகளால் தொடர்புகொள்ள முடியாத நாடாக மியான்மர் இருந்து வந்தது. ஆங்சாங் சூகி தலைமையில் ஜனநாயகம் கோரி நடத்தப்பட்ட கிளர்ச்சிகள் ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில் முழுமையான ஜனநாயக நாடாக மியான்மர் பரிணமித்தால் அத்தனை பொருளாதரத் தடைகளையும் நீக்க தயாராக இருப்பதாக மேற்குலக நாடுகள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் அண்மையில் சூகி உள்ளிட்டோர் போட்டியிட்ட மினி தேர்தலில் சூகியின் கட்சி பெருவாரியாக வென்றது. இதைத் தொடர்ந்து ஜனநாயகக் காற்றை மியான்மரும் சுவாசிக்க்த் தொடங்கியிருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் கேமரூன் இன்று மியான்மர் சென்றார். அவர் முன்னாள் ராணுவ தளபதியும் மியான்மர் அதிபருமான தியான் சென்னை சந்தித்துப் பேசினார்.
இதேபோல் ஆங்சாங்சூகியையும் அவர் சந்தித்துப் பேசினார். கேமரூனின் இப்பயணத்தின் மூலம் மியான்மர் மீதான பொருளாதாரத் தடைகள் முழுமையாக விலக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
1948-ம் ஆண்டு மியான்மர் விடுதலை பெற்ற பிறகு இங்கிலாந்து பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.