அணுசக்தி விவகாரம்: ஈரானுடன் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகள் நாளை துருக்கியில் பேச்சு
இஸ்தான்புல்: ஈரானின் அணு சக்தி விவகாரம் தொடர்பான சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நாளை மீண்டும் நடைபெற உள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ரசியா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.
ஈரான் அணுசக்தியை ஆக்கப்பூர்வமான விவகாரங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் - அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடக் கூடாது என்பது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிலைப்பாடு. இதற்காக ஈரான் மீது பொருளாதாரத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அணு ஆற்றலை ஆயுதத் தயாரிப்புக்கே பயன்படுத்துகிறது என்பதால் போர்மூலமே தீர்வு காண வேண்டும் என்கிறது இஸ்ரேல். ஆனால் ஈரான் மீது உடனே போர் தொடுப்பது அவ்வளவு சரியான நடவடிக்கை எல்ல என்று அமெரிக்கா கருதுகிறது. ஈரானும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணவும் விரும்புகிறது.
இதனால் ஒருகட்டமாக பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்க அமெரிக்கா முடிவு செய்தது. இதில் ஈரானின் நட்புநாடான சீனாவையும் உள்ளடக்கிக் கொள்ளவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
போரைத் தவிர்க்க, அணு உலைகளில் குறிப்பிட்ட விழுக்காடு யுரேனிய செறிவூட்டலை நிறுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்துகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு முன்பே முன்நிபந்தனையெல்லாம் விதிக்கக் கூடாது என்கிறது ஈரான்.
இந்நிலையில் துருக்கியில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே துருக்கி மத்தியஸ்தராக இருந்து இப்பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்துள்ளது.
போருக்கு தயாராகும் இஸ்ரேல்
பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க இஸ்ரேலோ ஈரான் மீது போர் தொடுப்பதில் முனைப்பு காட்டியே வருகிறது.
ஈரானின் அண்டைநாடான அஜர்பைஜானில் ராணுவத் தளங்களை இஸ்ரேல் அமைத்திருக்கிறது. இதேபோல் ருமேனியா அரசையும் இஸ்ரேல் பயன்படுத்திக் கொள்ல முடிவு செய்துள்ளது.
ஈரானின் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடையும் நிலையில் போரைத் தொடுப்பது என்பது இஸ்ரேலின் நிலை. இருப்பினும் இஸ்ரேல்- ஈரான் போரைத் தவிர்க்க வேண்டும் என்பதே இஸ்ரேலிய யூதர்கள் ஒருதரப்பினரின் கருத்தாக உள்ளது. தங்கள் மீது போர்தொடுத்தால் இஸ்ரேல் இல்லாமல் போய்விடும் என்று ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருக்கிறது ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது.