இடி மின்னல் தாக்கி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர் உள்பட 3 பேர் பலி
விழுப்புரம்: தமிழகத்தில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்து உள்ள வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். அவர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
அதே போன்று செஞ்சி அருகே உள்ள நாங்காத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பர் மனைவி பூங்காவனம் (25) என்பவர் ஏரிக்கரை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருக்கையில் இடி மின்னல் தாக்கி அதே இடத்தில் பலியானார்.
மேலும் விருத்தாச்சலத்தை அடுத்த பரவலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மனைவி செல்வி (35) வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கி உடல் கருகி இறந்தார்.
ஒரே நாளில் இடி மின்னல் தாக்கி மூன்று பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.