கரூர் அருகே மப்பில் கலாய்த்த கார் டிரவைர்: மரத்தில் கட்டிவைத்து அடித்துக் கொன்ற மக்கள்
கரூர்: கரூர் அருகே கார் டிரைவரை மரத்தில் கட்டி வைத்து அடித்துக் கொலை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள கிழிஞ்சல்நத்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(30). கார் டிரைவர். அவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். அவர் தினமும் மது அருந்திவிட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவரது இரு மனைவிகளும் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர்.
இதனால் கரூர் சுக்காலியூரை அடுத்த பண்டுதகாரன்புதூரில் உள்ள தனது அக்கா மீனா வீட்டில் ராஜா தங்கி இருந்தார். அங்கும் இதே போல போதையில் அக்கம் பக்கத்தினரிடம் தினமும் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (23) என்பவரை ராஜா தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் ஒன்று திரண்டு ராஜாவை ஊருக்கு வெளியே உள்ள கோயில் அருகே உள்ள வேப்பமரத்தில் கட்டிவைத்து உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஓடி வந்த அவரது அக்கா மீனா, அவரது கணவர் குமார் ஆகியோர் பொது மக்களிடம் மன்றாடியும் ராஜாவை அவர்கள் விடுவிக்கவில்லை.
இந்த நிலையில் அடி தாங்க முடியாத ராஜா சிறிது நேரத்தில் பிணமாக சாய்ந்தார். இதை பார்த்ததும் ராஜாவை தாக்கியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்த எஸ்.பி. சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜா கொலைக்கு காரணமான அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி (30), மணிவண்ணன் (23), சுப்பிரமணி (37), சிவக்குமார் (18) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 10 பேரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.