தமிழ்நாட்டில் 1,000 மெகாவாட் சூரிய மின்சாரம் தயாரிக்கத் திட்டம்!
சட்டசபையில் இன்று தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து தங்கமணி பேசுகையில்,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள வயலூர் கிராமத்தில் ரூ.160 கோடி முதலீட்டில் பாலிமர் பொருட்கள் உற்பத்தி வளாகம் உருவாக்கப்படும். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (சிட்கோ) தனியார் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கும் இந்த வளாகத்தில் மோட்டார் வாகனங்கள் மற்றும் எந்திரங்களுக்கு தேவையான 'பிளாஸ்டிக்' பொருட்கள் தயாரிக்கும் 100 தொழிற்சாலை அமைப்பதற்கான வசதிகள் இருக்கும். இதன்மூலம் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள தொலைநோக்கு திட்டத்தின்படி டிட்கோ நிறுவனம் வரும் 5 ஆண்டுகளில் சுமார் 1000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தும். இதற்காக மாநிலம் முழுவதும் சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து பல்வேறு மாவட்டங்களில் படிப்படியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக தென் மாவட்டங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் ரூ.1000 கோடி முதலீட்டில் 100 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்படும்.
தமிழ்நாடு 'மேக்னசைட்' நிறுவனம் மூலம் ரூ.12 கோடி முதலீட்டில் 2.1 மெகாவாட் மின் உற்பத்தி காற்றாலை நிறுவப்படும். தமிழநாடு உப்பு நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு தயாரிக்கும் ஆலையை நிறுவும் என்றார்.