ரூ250 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம்-அரசு

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு எந்தத் தடையும் இல்லாமல் மின்சாரம் கொடுக்கப்படுகிறது. அதேபோல் சிறுதொழில் நிறுவனங்களுக்கு தடையில்லாத மின்சாரம் அளிக்கப்பட வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த மின்துறை அமைச்சர் விஸ்வநாதன், ஜூன் மாதம் முதல் மின்வெட்டு நேரம் படிப்படியாகக் குறையும் என்றார். மேலும் குறுக்கிட்டுப் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கமணி, ரூ.250 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் எந்த நிறுவனமாக இருந்தாலும் அதற்கு தடையில்லாத மின்சாரம் அளிக்கப்படுகிறது. பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு இதுவரை 213 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேட்டூரில் புனல்மின் திட்டம்
மேலும் மேட்டூரில் 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட புனல் மின் திட்டத்தைச் செயல்படுத்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன் தெரிவித்தார்.
சட்டப்பேரவைய்ல் செவ்வாய்க்கிழமையன்று இது தொடர்பாக தேமுதிக உறுப்பினர் பார்த்திபன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், மேட்டூரில் மேல்நிலை அணையில் இருக்கும் தண்ணீரைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்த பின்னர் அந்த தண்ணீரை கீழ்நிலை அணையில் தேக்கி மீண்டும் அந்த தண்ணீரை மேல்நிலை அணைக்கு மோட்டார்கள் மூலம் ஏற்றி மறுபடியும் அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குந்தாவில் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் வனத் துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியபோது, மறுக்கப்பட்டது. அதுபோன்ற திட்டம்தான் இதுவும். எனவே, மத்திய அரசின் அனுமதி பெற்று திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications