இல்லத்தரசிகளை பீதிக்குள்ளாக்கும் பீன்ஸ் விலை...!

கோடைவெயில் கபாலத்தைத் தொட்டு, நரம்புகளைச் சுட்டு, அத்தனை பேரையும் ஆட வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த கடும் வெயில் காரணமாக மக்களுக்குத்தான் புழுக்கம் என்றால் காய்கறிகளுக்கும் வந்தது பெரும் கிராக்கி. காய்கறி பயன்பாடு வெயில் காலத்தில் அதிகமாக இருக்கும். அதேசமயம், சில வகை காய்கறிகளின் விளைச்சல் வெயில் காலத்தில் குறையும்.இதனால் விலை கிடுகிடுவென அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எந்தக் காயைத் தொட்டாலும் விலை கடுமையாக சுடுகிறது.
குறிப்பாக பீன்ஸ் விலைதான் மக்களை மிரள வைக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளிலிருந்துதான் பீன்ஸ் வர வேண்டும். ஆனால் அங்கு விளைச்சல் குறைந்துள்ளதால் பீன்ஸ் வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து பீன்ஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களிலேயே பீன்ஸ் விலை உயர்ந்துதான் இருக்கும். தற்போது சென்னையைப் பொறுத்தவரை ஒரு கிலோ பீன்ஸ் 50 முதல் 60 ரூபாய் வரை விற்கிறது. இதனால் பீன்ஸ் பக்கம் போகவே இல்லத்தரசிகள் அஞ்சுகிறார்கள். பலர் பீன்ஸ் என்ற பெயரையே மறக்க ஆரம்பித்து விட்டனர்.
பீன்ஸ் மட்டுமல்லாமல் முட்டைகோஸ், நூக்கல், சவ்சவ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. கேரட், அவரைக்காய், பாகற்காய் என எநதக் காயையும் விலை உயர்வு விடவில்லை.
தக்காளி மட்டும்தான் விலை உயராமல் தளதளவென காட்சி அளிக்கிறது. அதேபோல பெரிய வெங்காயம், முருங்கைக்காய், சாம்பார் வெங்காயம் எனப்படும் சிறிய வெங்காயம் ஆகியவற்றின் விலையும் பெரிதாக ஏறவில்லை. கட்டுக்குள் உள்ளன.
எப்பதாங்க காய்கறி விலை கைக்கு அடக்கமாக குறையும் என்று வியாபாரிகளிடம் கேட்டால், வெயில் முடியட்டும், குறைஞ்சுடும் என்று பதில் வருகிறது.












Click it and Unblock the Notifications